கலெக்டர் அலுவலகம் அருகே மருத்துவக்கல்லூரிக்கான இடம் தேர்வு; அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தவும் நடவடிக்கை


கலெக்டர் அலுவலகம் அருகே மருத்துவக்கல்லூரிக்கான இடம் தேர்வு; அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தவும் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2019 10:30 PM GMT (Updated: 12 Oct 2019 3:16 PM GMT)

விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்க கலெக்டர் அலுவலக வளாகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன் மருத்துவக்கல்லூரி இணைப்பு ஆஸ்பத்திரியாக அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப் படுகிறது.

விருதுநகர்,

தமிழக அரசு விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஏற்கனவே விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்த போது வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சுகாதாரத் துறை செயலாளர் பியூலா ராஜேஷும் மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ஷவர்தனையும், சுகாதாரத்துறை செயலாளர் பீரீத்தாவையும் சந்தித்து தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்கக்கோரியும் மனு கொடுத்தனர்.

கடந்த மாதம் 26-ந் தேதி டெல்லியில் மத்திய சுகாதாரத் துறையின் ஒப்புதல் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய சுகாதாரத் துறை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்க இடம் தேர்வு செய்யுமாறு அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து அரசு அதிகாரிகள் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே இடம் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கலெக்டர் அலுவலக வளாகம் அருகே உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 22½ ஏக்கர் நிலத்தை கண்டறிந்து அந்த இடத்தில் மருத்துவக்கல்லூரி தொடங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தற்போது அந்த இடம் அளவிடப்பட்டு அங்குள்ள முட்செடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த இடம் மதுரை-கன்னியாகுமாரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நிலையில் மருத்துவக்கல்லூரி தொடங்க ஏற்ற இடம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கு இணைப்பு ஆஸ்பத்திரியாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்படும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த மத்திய அரசு 60 சதவீத நிதி ஒதுக்கீடும் மாநில அரசு 40 சதவீத நிதி ஒதுக்கீடும் செய்யும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மருத்துவக்கல்லூரி தொடங்க அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான உடன் அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. மருத்துவக்கல்லூரி இணைப்பு ஆஸ்பத்திரியில் 300 உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் இருக்க வேண்டும் என விதிமுறைகள் கூறுகின்றன. விருதுநகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியை பொறுத்தமட்டில் இங்கு 300-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு உள்ள நிலையில் தினமும் 1000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே விருதுநகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்துவதற்கு அனைத்து வாய்ப்பும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே தமிழக முதல்-அமைச்சர் கடந்த ஆண்டு விருதுநகரில் பல்மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்றும் இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் இந்திய மருத்துவக்குழு மருத்துவக்கல்லூரி இல்லாமல் பல்மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி அளிக்க முடியாது என்ற விதிமுறையை சுட்டிக்காட்டியதால் பல்மருத்துவக்கல்லூரி திட்டம் முடங்கி இருந்தது. தற்போது மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான அனைத்து வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில் விருதுநகரில் மருத்துவக்கல்லூரி அருகிலேயே பல்மருத்துவக்கல்லூரி தொடங்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் அடுத்த கல்வியாண்டிலேயே மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில் மருத்துவக்கல்லூரியின் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றும் இந்த மருத்துவக்கல்லூரியில் 150 மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான மருத்துவக்கல்லூரி தொடங்கப்படுவது இம்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Next Story