மதுபோதையில் நடந்த தகராறு: வாலிபர் கல்லால் தாக்கி கொலை; நண்பர்கள் 3 பேர் கைது


மதுபோதையில் நடந்த தகராறு: வாலிபர் கல்லால் தாக்கி கொலை; நண்பர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 Oct 2019 11:00 PM GMT (Updated: 12 Oct 2019 3:46 PM GMT)

சிவகாசியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகாசி,

சிவகாசியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள எஸ்.புதுப்பட்டியை சேர்ந்த காளிச்சாமி மகன் நமகோடீஸ்வரன் (வயது 22). இவர் தனது நண்பர்கள் முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த ராமர் (22), மூர்த்தி (25) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு முத்துராமலிங்கபுரம் காலனியில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது போதையில் இருந்த நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த ராமர், வாலிபர் நமகோடீஸ்வரனை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மூர்த்தி பீர்பாட்டிலால், நமகோடீஸ்வரனை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த நமகோடீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் சிவகாசி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராமர், மூர்த்தி, மாரீஸ்வரன் உள்பட 7 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். விசாரணையின் முடிவில் ராமர், மூர்த்தி, மாரீஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story