தஞ்சையில் தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் வருவாய் கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்


தஞ்சையில் தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் வருவாய் கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:45 PM GMT (Updated: 12 Oct 2019 5:04 PM GMT)

தஞ்சையில் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை வருவாய் கோட்டாட்சியர் சுரே‌‌ஷ் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

மத்திய அரசின் சுற்றுலாத்துறை, தமிழகஅரசின் சுற்றுலாத்துறை, தென்னகபண்பாட்டுமையம், சுற்றுலா வளர்ச்சி குழுமம், இன்டாக் அமைப்பு ஆகியவை சார்பில் தஞ்சை பெரியகோவிலில் நேற்று தூய்மையே சேவை இயக்கம் மற்றும் கலாசார திருவிழா நடைபெற்றது. காலையில் பெரியகோவில் வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தூய்மைப்பணியை மேற்கொண்டனர்.

பின்னர் தூய்மையே சேவை என்ற தலைப்பில் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சையில் நடந்தது. அரண்மனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை வருவாய் கோட்டாட்சியர் சுரே‌‌ஷ் கொடிஅசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி வழியாக சென்று பெரியகோவிலில் நிறைவடைந்தது.

கலாசார திருவிழா

இதில் ஏராளமான பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீதமகாலில் கலாசாரமும், பன்முகத்தன்மையும் என்ற தலைப்பில் கருத்தரங்கமும், மாலையில் பெரியகோவிலில் கலாசார திருவிழாவும் நடைபெற்றது. இதில் நாட்டுப்புற கலைகளான நையாண்டி மேளம், கொம்பு, புலியாட்டம், கும்மியாட்டம், தப்பாட்டம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, காளையாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், கால்கோல் ஆட்டம், ஆதி மேளம், துடும்பாட்டம், காளியாட்டம் மற்றும் தெருகூத்து போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு தஞ்சை ராஜகோபால பீரங்கி மேடையில் இருந்து பாரம்பரிய நடைபயணமும், 10.30 மணிக்கு அரண்மனை வளாகத்தில் சுற்றுலா அனைவருக்குமானது என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெறுகிறது.

Next Story