மக்களுக்காக எதையும் செய்யாமல் நாராயணசாமி, ரங்கசாமி வாய்ப்பந்தல் - கண்ணன் தாக்கு


மக்களுக்காக எதையும் செய்யாமல் நாராயணசாமி, ரங்கசாமி வாய்ப்பந்தல் - கண்ணன் தாக்கு
x
தினத்தந்தி 13 Oct 2019 10:45 PM GMT (Updated: 13 Oct 2019 4:33 PM GMT)

மக்களுக்காக எதையும் செய்யாமல் நாராயணசாமியும், ரங்கசாமியும் வாய்ப்பந்தல் போடுகிறார்கள் என்று கண்ணன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் வெற்றிச்செல்வம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கண்ணன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இன்றைய முதல்-அமைச்சர் நாராயணசாமியும், முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமியும் மக்களுக்காக எதையும் செய்யாமல் வெறும் வாய்ப்பந்தல் தான் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இருவருக்குமே எப்படியாவது மக்களை வஞ்சித்து, ஏமாற்றி வாக்குகளை பெற்று தங்களது சுயவளர்ச்சியை மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் நோக்கம், லட்சியம்.

எனவே வாக்காளர்கள் தயவு செய்து தங்கள் சந்ததியினரின், எதிர்கால நல்வாழ்க்கைக்காக இந்த இரு அணிகளையும் ஒதுக்கிவிட்டு மாற்று அணியான, மாற்றம் கொண்டு வரும் அணியான மக்கள் முன்னேற்ற காங்கிரசின் சின்னமான ‘ஆட்டோ’ சின்னத்தில் வாக்களித்து நல்ல எதிர்காலத்துக்கு, வாழ்க்கைக்கு வழிகோல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story