கிரு‌‌ஷ்ணகிரியில் சர்வதேச பேரிடர் தணிக்கும் நாள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


கிரு‌‌ஷ்ணகிரியில் சர்வதேச பேரிடர் தணிக்கும் நாள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Oct 2019 11:00 PM GMT (Updated: 13 Oct 2019 10:17 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரியில் சர்வதேச பேரிடர் தணிக்கும் நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் சர்வதேச பேரிடர் தணிக்கும் நாள் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேற்று தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தின் போது பேரிடர் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடர் நிகழ்வுகளின்போது செய்யக்கூடியவை, செய்ய கூடாதவை, முதலுதவி குறிப்புகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோ‌‌ஷமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி பெங்களூரு சாலை வழியாக ஆர்.சி. பாத்திமா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் பேரிடர் மேலாண்மை முதல் கள பொறுப்பாளர்கள், சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஒத்திகை நிகழ்ச்சி

தொடர்ந்து ஆர்.சி. பாத்திமா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தீயணைப்புத்துறை சார்பாக பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை நிழ்ச்சி நடைபெற்றது. மேலும் பேரிடர் காலங்களில் கியாஸ் பயன்பாடு, முதலுதவி குறித்தும், தீ தடுப்பு ஆலோசனைகள், விபத்து ஏற்படும் போது மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் மழை அதிகமாக இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராமமூர்த்தி, கிரு‌‌ஷ்ணகிரி உதவி கலெக்டர் தெய்வநாயகி, கிரு‌‌ஷ்ணகிரி தாசில்தார் ஜெய்சங்கர், வருவாய் பேரிடர் மீட்பு தாசில்தார் சத்தியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story