கோத்தகிரியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரி - பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


கோத்தகிரியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரி - பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 14 Oct 2019 10:15 PM GMT (Updated: 14 Oct 2019 7:55 PM GMT)

கோத்தகிரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரியை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோத்தகிரி,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வியாபாரிகள் 2 பேர், கோத்தகிரிக்கு சரக்கு ஆட்டோவில் காய்கறிகளை கொண்டு வந்து நேற்று மதியம் 1 மணியளவில் விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கினர். அப்போது அதில் ஒரு வியாபாரி, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கேட்க சென்றார். அந்த வீட்டில் 12 வயது சிறுமி வாசலில் நின்று கொண்டிருந்தாள்.

பின்னர் சிறுமியிடம் தண்ணீர் வாங்கி அவர் குடித்தார். உடனே வீட்டில் யாரும் இல்லை என நினைத்து கொண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டாள்.

சத்தம் கேட்டு அங்கு வந்த சிறுமியின் தந்தை மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வியாபாரியை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். விசாரணையில் அவர், மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு பகுதியை சேர்ந்த ஜவகர்தீன்(வயது 43) என்பது தெரியவந்தது.

பின்னர் அவரை கோத்தகிரி போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் கொண்டு வந்தனர். அப்போது கோத்தகிரி போலீசார், குன்னூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து, அவரை ஒப்படைக்கும்படி தெரிவித்தனர். அதன்படி பொதுமக்கள் குன்னூருக்கு சென்று மகளிர் போலீசிடம் அவரை ஒப்படைத்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் கோத்தகிரி பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story