பெருங்களத்தூரில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை


பெருங்களத்தூரில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 14 Oct 2019 10:45 PM GMT (Updated: 14 Oct 2019 9:47 PM GMT)

பெருங்களத்தூரில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் சீனிவாசன் நகர், அவ்வை தெருவைச் சேர்ந்தவர் கண்ணன்(வயது 53). இவர், திருவஞ்சேரியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுதா(49). இவர், தாம்பரம் நகராட்சி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக கண்ணன் உடல்நிலை பாதிக்கப்பட்டு தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை, பார்த்துக்கொள்வதற்காக சுதா, வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் அவரது வீட்டின் மாடியில் வசிக்கும் சித்ரா என்பவர், கண்ணன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஆசிரியை சுதாவிற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார்.

உடனடியாக அவர், ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்து பார்த்தார். அதில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டது தெரிந்தது.

இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story