மாமல்லபுரத்தில் குவிந்த பிளாஸ்டிக் பைகள் குப்பை தொட்டிகள் அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை


மாமல்லபுரத்தில் குவிந்த பிளாஸ்டிக் பைகள் குப்பை தொட்டிகள் அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Oct 2019 10:45 PM GMT (Updated: 15 Oct 2019 7:06 PM GMT)

மாமல்லபுரம் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் தேங்கி கிடக்கின்றன. அங்கு குப்பை தொட்டிகள் அமைத்து தூய்மை பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜன்பிங் வந்து சென்ற பிறகு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை தானே அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஆனால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அதை பொருட்படுத்தாமல் சுற்றுலா வரும்போது தாங்கள் கொண்டு வந்த உணவுக்கழிவுகளையும், பிளாஸ்டிக் பைகளையும் புராதன சின்னங்கள் உள்ள பகுதியில் போட்டு விட்டு செல்கின்றனர்.

அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை கல், ஐந்துரதம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கருங்கல்லில் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இரு நாட்டு தலைவர்கள் வருகையையொட்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பு எந்த காரணமும் இல்லாத நிலையில் அனைத்து இடங்களிலும் கருங்கல் குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு விட்டன.

அதனால் சுற்றுலா வரும் பயணிகள் குப்பை தொட்டிகள் இல்லாததால் கண்ட இடங்களில் குப்பைகளை வீசிவிட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அதனால்் முக்கிய இடங்களில் பயணிகள் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை போடுவதற்கு குப்பை தொட்டிகள் அமைக்க வேண்டும் என்றும், முக்கிய இடங்களில் குவிந்து, சிதறி கிடக்கும் குப்பைகளை அகற்ற தொல்லியல் துறையும், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த நகரை சுத்தமாக வைத்துக்கொள்ள அனைவருடைய ஒத்துழைப்பும் முக்கியத் தேவையாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்கள் வருகையையொட்டி முக்கிய புராதன சின்னங்கள் அருகே சாலையோர கடைகள் அகற்றப்பட்டு சாலைகள் புதுப்பொலிவோடு சீரமைக்கப்பட்டு, பாதுகாப்பு சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள சாலையில் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்ட பகுதிகளில் சிலர் மீண்டும் மேசை தள்ளு வண்டிகள்் வைத்து இடம் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்து வருவதாக காவல் துறைக்கு புகார்கள் சென்றன.

இந்த நிலையில் நேற்று மாமல்லபுரம் சரக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், மாமல்லபுரம் காவல் துறை சார்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் ஆகியோர் தலைமையில் சென்ற போலீசார் சுற்றுலா வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட கடைக்காரர்களுக்கு அழைத்து எச்சரிக்கை விடுத்து அங்கு கடை வைக்க வைத்திருந்த மேசை, தள்ளு வண்டிகள் உள்ளிட்டவைகளை எடுத்து செல்ல ஆக்கிரமிப்பாளர்களுக்கு கெடு விதித்தார்.

தொடர்ந்து சாலை ஆக்கிரமிப்பில் ஈடுபடும் கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புராதன மையங்களில் ஆக்கிரமிப்பில் ஈடுபட வேண்டாம் என்றும், மாற்று இடத்தில் கடைகள் வழங்க மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரைப்பதாகவும் மாமல்லபுரம் காவல் துறை சார்பில் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் மாமல்லபுரம் கடற்கரை சாலையில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இடத்தில் 150 கடைகள் உள்ளன. இரு நாட்டு தலைவர்கள் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி வருவாய்த்துறை சார்பில் இந்த கடைகள் பூட்டப்பட்டு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தற்போது இக்கடைகளின் சாவிகளை மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அந்தந்த கடைகளின் உரிமையாளர்களிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தது. ஆனால் மின் இணைப்புகள் வழங்க இன்னும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சிலர் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இந்த கடைகளை முறைகேடாக ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என விற்றுள்ளதாக சுற்றுலாத்துறைக்கு புகார்கள் வந்தது.

மாவட்ட கலெக்டர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுலாத்துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.

இன்று (புதன்கிழமை) மாவட்ட கலெக்டர் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தில் நடக்கும் அதிகாரிகள் கூட்டத்தில் நகர வளர்ச்சி திட்டம் பற்றிய ஆலோசனை நடத்தப்பட்ட பின்னரே கடற்கரை சாலையில் உள்ள கடைகளுக்கு மீண்டும் மின் இணைப்புகள் வழங்குவது குறித்தும், கடற்கரைக்கு செல்ல சாலை வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

Next Story