சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில் சிவகாசியில் ஆன்-லைன் பட்டாசு விற்பனை; வியாபாரிகள் குற்றச்சாட்டு


சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில் சிவகாசியில் ஆன்-லைன் பட்டாசு விற்பனை; வியாபாரிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Oct 2019 11:15 PM GMT (Updated: 18 Oct 2019 10:14 PM GMT)

ஆன்-லைனில் பட்டாசு விற்பனைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில் சிவகாசியில் பலர் அதை செய்வதால் கடைவியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

சிவகாசி,

இந்த ஆண்டுக்கு தேவையான பட்டாசுகள் சிவகாசி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் மும்முரமாக தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக உற்பத்தியில் இந்த ஆண்டு 40 சதவீத உற்பத்தி பல்வேறு காரணங்களால் பாதிப்பு அடைந்துள்ளது. சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை தொடர்ந்து பெய்ததால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான உற்பத்தியைவிட இந்த ஆண்டு உற்பத்தி பெரும் அளவில் பாதிக் கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் பெரும் அளவில் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் சிவகாசியில் இருந்து இந்தியா முழுவதும் பட்டாசுகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் சிவகாசியில் ஆன்-லைன் விற்பனை தொடங்கப்பட்டது.இதில் 80-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர்.இவர்கள் ரூ.40 கோடிக்கு மேல் ஆன்-லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆன்-லைன் வர்த்தகத்தில் ஈடுபட பலர் முன்வந்தனர்.இந்தநிலையில் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்பட்ட நேரத்தில் சிவகாசியில் இருந்து பார்சல் மூலமாக டெல்லிக்கு பட்டாசு பண்டல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதை தொடர்ந்து ஒருவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஆன்-லைன் பட்டாசு வர்த்தகத்துக்கு தடை விதித்தது.

இந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்து தங்களது ஆன்-லைன் வர்த்தகத்தை நிறுத்தி விட்டனர். கடந்த சில நாட்களுக்குமுன் சிவகாசியில் நடைபெற்ற பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தின் போது ஆன்-லைன் விற்பனை கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் சிவகாசியில் தற்போது 10-க்கும் மேற்பட்டவர்கள் ஆன்-லைன் பட்டாசு வர்த்தகம் செய்வதாக கூறப்படுகிறது. அவர்கள் தங்களது இணையத்தில் பட்டாசுகளின் வகைகள் மற்றும் விலைகள் குறித்து உரிய விளம்பரம் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிவகாசிக்கு நேரடியாக வரமுடியாத வடமாநிலத்தவர் பலர் இந்த ஆன்-லைன் வர்த்தகத்தை விரும்பி உரியபணம் செலுத்தி வருகிறார்கள். உரிய பட்டாசு வகைகளை அனுப்பி வைக்கிறார்கள். ஆன்-லைன் பட்டாசு வர்த்தகத்தில் மோசடி நடக்கவும் வாய்ப்பு உள்ளது.

இது குறித்து பட்டாசு விற்பனையாளர் நடராஜமூர்த்தி கூறியதாவது:-

சிவகாசியில் உள்ள பிரபல நிறுவனங்கள் தங்களது விநியோகஸ்தர்கள் மூலம் பல மாநிலங்களில் பட்டாசு விற்பனை செய்து வருகிறார்கள். அதில் சில இடங்களில் சிவகாசி விலையைவிட பலமடங்கு விலை உயர்த்தி சிலர் பட்டாசுகளை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்தபகுதியை சேர்ந்த பொதுமக்கள் மொத்தமாக சிவகாசிக்கு வந்து பாட்டாசுகளை வாங்கி சென்று அங்கு அவர்கள் பிரித்துக்கொள்வது வழக்கம்.இதற்கிடையில் ஆன்-லைன் வர்த்தகம் வந்த பின்னர் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை இங்கிருந்து கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது ஆன்-லைன் வர்த்தகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில் சிவகாசியில் சிலர் ஆன்-லைன் வர்த்தகம் மூலம் பட்டாசுகளை விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் சிவகாசியில் உள்ள சிறு வியாபாரிகள் பெரும் அளவில் பாதித்துள்ளனர்.இந்த பகுதியில் மட்டும் 600-க்கும் அதிகமான கடைகள் உள்ளன.இவர்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி ஆன்-லைன் மூலம் பட்டாசு வியாபாரத்தில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story