பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் கேதார கவுரி பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் கேதார கவுரி பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 28 Oct 2019 10:30 PM GMT (Updated: 28 Oct 2019 4:54 PM GMT)

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் நடைபெற்ற கேதார கவுரி பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர்,

இமயமலைச்சாரலில் உள்ள கேதாரம் சிவபெருமாள் உறைவிடம் ஆகும். சக்தி ரூபமான பார்வதி சிவனை நினைத்து 21 நாட்கள் விரதம் (உபவாசம்) இருந்து சிவனின் மற்றொரு பாதியாக ஐக்கியமானார். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் தீபாவளியையொட்டி வரும் அமாவாசைக்கு முன்னதாக விரதம் இருந்து அமாவாசை தினத்தில் விரதத்தை நிறைவு செய்து அம்பாளை பூஜை செய்தால் சிவசக்தி அருளால் வீட்டில் சகல சவுபாக்கியங்கள் பெருகும். கணவன்- மனைவி இடையேயும், குடும்பத்திலும் நல்லுறவு மேம்படும் என்பது ஐதீகம். பெரம்பலூரில் ஆண்டுதோறும் தீபாவளி அன்று வரும் அமாவாசை தினத்தில் மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் உள்ள தாயார் சன்னதியில் கேதார கவுரி விரதபூஜை நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கேதார கவுரி பூஜை விமரிசையாக நடந்தது. இதனை முன்னிட்டு அக்ரஹாரத்தில் உள்ள கோவில் பரம்பரை ஸ்தானீகர் இல்லத்தில் இருந்த அம்பாள் சிலை அலங்கரிக்கப்பட்டு, அங்கிருந்து மரகதவல்லித்தாயார் சன்னதிக்கு எடுத்துவரப்பட்டது.

பலத்தமழை

அங்கு கலசம் ஆவாகனம் செய்யப்பட்டு, வினாயகர் பூஜை, அஷ்டோத்திர பூஜை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து கேதாரகவுரி பூஜையின் மகத்துவம் குறித்து பக்தர்களுக்கு விளக்கப்பட்டது. பூஜையை கோவில் பரம்பரை ஸ்தானிகம் நாராயண மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடத்தி வைத்தனர். இதில் திரளான பெண்கள், பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு தேங்காய், பழம் நிவேதனம் செய்து அம்பாளை வழிபட்டனர். மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை 4 பகுதிகளாக நடந்த இந்த பூஜையின் இடையே ஏறத்தாழ 45 நிமிடம் பலத்தமழை பெய்தது. இருப்பினும் மழைக்கு இடையே இந்த பூஜை நடந்தது. பூஜையின் போது மஞ்சள் சரடு வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அதனை பெண்கள் தங்களது வீட்டிற்கு எடுத்துச்சென்று வலது கையில் அணிந்துகொண்டனர். மேலும் தீபாவளியை முன்னிட்டு மரகதவல்லித்தாயார் மற்றும் மதனகோபாலனுக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சிறப்பு வழிபாடு

அதேபோல் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரியம்மன் கோவிலில் பெண்கள் பலர் விரதம் இருந்து மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று இருக்கவும் மேலும் தங்களது குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டியும் அமாவாசை விரதம் மேற்கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். இதையொட்டி சாமுண்டீஸ்வரியம்மனுக்கு பால், சந்தனம், தயிர், பன்னீர், திரவியப்பொடி உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விரதம் இருந்த பெண்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

Next Story