மங்களூரு அருகே கடல் கொந்தளிப்பில் சிக்கி தரை தட்டி நின்ற கப்பல்


மங்களூரு அருகே கடல் கொந்தளிப்பில் சிக்கி தரை தட்டி நின்ற கப்பல்
x
தினத்தந்தி 29 Oct 2019 11:46 PM GMT (Updated: 29 Oct 2019 11:46 PM GMT)

மங்களூரு அருகே கடல் கொந்தளிப்பில் சிக்கி தூர்வாரும் கப்பல் ஒன்று தரை தட்டி நின்றது.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே புதிய மங்களூரு துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் பெரிய அளவிலான சரக்கு கப்பல் உள்பட பல்வேறு கப்பல்களை கையாள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இத்துறைமுக பகுதியில் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதற்காக மும்பையில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தூர்வாரும் கப்பல் ஒன்று புதிய மங்களூரு துறைமுகத்திற்கு வந்தது. அது சூரத்கல் கடற்கரை பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மங்களூரு கடல் பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினமும் மங்களூரு கடல் பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூர்வாரும் கப்பல் கொந்தளிப்பில் சிக்கி கரையை நோக்கி நகர்ந்தது. பின்னர் அது தரை தட்டி நின்றது. மேலும் கப்பலில் பொருத்தப்பட்டிருந்த திசை காட்டும் கருவி உள்பட பல கருவிகள் சேதமடைந்தன.

அந்த கப்பலில் சிக்கி இருந்த கேப்டன் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஊழியர்கள் என மொத்தம் 20 பேரை மங்களூரு துறைமுக அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். இதுபற்றி புதிய மங்களூரு துறைமுக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மங்களூரு துறைமுக பகுதியில் தூர்வாரும் பணிக்காக இந்த தூர்வாரும் கப்பல் வரவழைக்கப்பட்டது. ஆனால் அதில் உள்ள தூர்வாரும் ரப்பர் பகுதி எளிதில் சேதமடையக் கூடியது. அதனால் மாற்று தூர்வாரும் கப்பலையும் வரவழைத்துள்ளோம். முதலில் வந்த கப்பல்தான் தற்போது கடல் கொந்தளிப்பில் சிக்கி தரை தட்டி நிற்கிறது.

அந்த கப்பல் கடல் கொந்தளிப்பில் சிக்கியபோது, அது மூழ்கி விடாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதனால்தான் அது கடலில் மூழ்காமல் நகர்ந்து ஹொசபெட்டு கடல் பகுதியில் தரை தட்டி நிற்கிறது. இல்லாவிட்டால் அது மூழ்கி இருக்கும். விரைவில் அதை இழுவை கப்பல் மூலம் கடலுக்குள் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story