நடத்தையில் சந்தேகம்: மனைவியை 30 முறை கத்தியால் குத்தி கொன்ற தொழிலாளி - போலீசார் கைது செய்து விசாரணை


நடத்தையில் சந்தேகம்: மனைவியை 30 முறை கத்தியால் குத்தி கொன்ற தொழிலாளி - போலீசார் கைது செய்து விசாரணை
x
தினத்தந்தி 3 Nov 2019 9:45 PM GMT (Updated: 3 Nov 2019 9:06 PM GMT)

மடிகேரி டவுனில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை 30 முறை கத்தியால் குத்தி தொழிலாளி ஒருவர் கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடகு,

குடகு மாவட்டம் மடிகேரி டவுன் ஹொச படாவனே பகுதியில் வசித்து வந்தவர் செரீப்(வயது 27). இவரது மனைவி ஜுபைதா(25). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். செரீப் மடிகேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் செரீப்புக்கு, தனது மனைவி ஜுபைதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர் தனது மனைவியிடம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவும் செரீப் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரிடம் தகராறு செய்தார். இதனால் கணவன், மனைவி இடையே கடும் வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் கணவன், மனைவி இருவரும் வீட்டில் படுத்து தூங்கி விட்டனர். இந்த நிலையில் நள்ளிரவில் விழித்தெழுந்த செரீப், தனது மனைவி மீது ஆத்திரம் தாங்காமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தினார். 30 முறை ஜுபைதாவை சரமாரியாக குத்திய செரீப் மேலும் ஆத்திரம் தாங்காமல் கழுத்தை நெரித்தார்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஜுபைதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து செரீப் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதற்கிடையே ஜுபைதாவின் கூச்சல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் ஜுபைதா ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ந்து போயினர். அதையடுத்து அவர்கள் இதுபற்றி மடிகேரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் ஜுபைதாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஜுபைதாவை அவருடைய கணவர் செரீப்பே கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜுபைதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அப்பகுதியில் பதுங்கி இருந்த செரீப்பையும் போலீசார் கைது செய்தனர். அதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story