தேசிய திறனறி முதல்நிலை தேர்வு 5 ஆயிரத்து 611 பேர் எழுதினர்


தேசிய திறனறி முதல்நிலை தேர்வு 5 ஆயிரத்து 611 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 3 Nov 2019 10:27 PM GMT (Updated: 3 Nov 2019 10:27 PM GMT)

புதுவையில் நடந்த தேசிய திறனறி முதல்நிலை தேர்வை 5 ஆயிரத்து 611 பேர் எழுதினர்.

புதுச்சேரி,

புதுவை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் குப்புசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் புதுவை யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களிலும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய திறனறி முதல்நிலை தேர்வு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நேற்று நடந்தன.

தேசிய திறனறி முதல்நிலை தேர்வு 19 மையங்களிலும், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு 10 மையங்களிலும் நடந்தது. இதில் தேசிய திறனறி முதல்நிலை தேர்வு எழுத 6 ஆயிரத்து 563 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 5 ஆயிரத்து 611 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதேபோல் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கு 2 ஆயிரத்து 578 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 2 ஆயிரத்து 152 பேர் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள் மற்றும் விடைக்குறிப்புகள் புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்கக இணைய தள முகவரியான https://www.sch-o-o-l-e-dn.py.gov.in நாளை மறுநாள் (புதன்கிழமை) வெளியிடப்படும். விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வருகிற 13-ந் தேதிக்குள் nm-msnts@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story