தேன்கனிக்கோட்டை அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது


தேன்கனிக்கோட்டை அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2019 11:00 PM GMT (Updated: 7 Nov 2019 8:49 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பேவநத்தம் வனப்பகுதியில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார், வனவர் கதிரவன் மற்றும் வனத்துறையினர் பேவநத்தம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் ஒருவர் வலைகளுடன் சுற்றி கொண்டிருந்தார். அவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் மாகடி கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 35) என்பதும், முயல் வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் மஞ்சுநாத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

உடும்பு கறி

அதே போல உரிகம் வனப்பகுதிக்கு உட்பட்ட ஒக்கமடுகு பகுதியில் வனச்சரகர் வெங்கடாசலம் தலைமையில் வனக்காப்பாளர் பிரித்திவிராஜ் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் ஒருவர் உடும்பை வேட்டையாடி அதன் கறியை கொண்டு வந்து கொண்டிருந்தார்.

அவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் அஞ்செட்டி அருகே உள்ள ஒண்டூர் கிராமத்தை சேர்ந்த சோமா (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர். 

Next Story