திருவாரூரில் ரூ.20 லட்சத்தில், கால்நடைகளுக்கு அம்மா ஆம்புலன்ஸ் சேவை - அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்


திருவாரூரில் ரூ.20 லட்சத்தில், கால்நடைகளுக்கு அம்மா ஆம்புலன்ஸ் சேவை - அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Nov 2019 10:30 PM GMT (Updated: 10 Nov 2019 5:31 PM GMT)

திருவாரூரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான கால்நடைகளுக்கு அம்மா ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் என்ற அவசர மருத்துவ வாகன சேவை தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு அம்மா ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா ஆடுகள், மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கால்நடைகளுக்கான மருத்துவ சேவைகளை கருத்தில் கொண்டு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான அவசர மருத்துவ ஊர்தி சேவையான அம்மா ஆம்புலன்ஸ் கடந்த 5-ந்தேதி முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவையான அம்மா ஆம்புலன்ஸ் தொடங்கி வைக்கப்படுகிறது. இச்சேவையை பெற 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். இச்சேவையானது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். மேலும் இந்த அவசர மருத்துவ ஊர்தியில் அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.

இதுதவிர பாம்பு, விஷ முறிவு மருந்து மற்றும் நுண்ணுயிரிகளை கண்டறியும் நுண்ணோக்கி வசதியும், கால்நடை பராமரிப்புத்துறை பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொலைக்காட்சியும் வாகனத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் ஒரு கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர் சென்று கால்நடைகளுக்கான அவசர மருத்துவ சேவைகளை செய்வார்கள். இச்சேவையினை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதில் கூடுதல் கலெக்டரும், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனருமான கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தனபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story