காங்கேயம் அருகே, தூர்வாரப்பட்டதால் நிரம்பிய கத்தாங்கண்ணி குளம் - விவசாயிகள் மகிழ்ச்சி


காங்கேயம் அருகே, தூர்வாரப்பட்டதால் நிரம்பிய கத்தாங்கண்ணி குளம் - விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 10 Nov 2019 10:15 PM GMT (Updated: 10 Nov 2019 9:15 PM GMT)

காங்கேயம் அருகே தூர்வாரப்பட்ட கத்தாங்கண்ணி குளம் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காங்கேயம், 

காங்கேயம் அருகே கத்தாங்கண்ணி கிராமத்தில் உள்ள குளம் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது.. இந்த குளத்தில் தண்ணீர் தேங்கினால், கத்தாங்கண்ணி, வயக்காட்டு புதூர், ரெட்டிபாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்ய முடியும். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.கத்தாங்கண்ணியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து கத்தாங்கண்ணி குளத்திற்கு தண்ணீர் செல்ல வாய்க்கால் உள்ளது. நொய்யல் ஆற்றில் அவ்வப்போது சாயக்கழிவு நீர் சென்றதால், கத்தாங்கண்ணி குளத்திற்கு சாயக்கழிவு நீர் சென்று விடக்கூடாது என்பதற்காக தடுப்பணை உடைக்கப்பட்டது. இதனால் கத்தாங்கண்ணி குளத்திற்கு செல்லும் வாய்க்கால் தூர்வாரப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. குளமும் தூர்வாரப்படவில்லை.

இதனால் குளத்திற்கு நீர் வராமல், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர்களாக காணப்பட்டது. குளத்திற்கு செல்லும் வாய்க்காலும், புதர் மண்டி, மண் மூடி காணப்பட்டது.

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரில் உப்புத்தன்மை குறைவாக இருக்கும். இதனால் அந்த தண்ணீரை குளத்திற்கு திறந்து விட வேண்டும். இதற்காக குளத்தையும், வாய்க்காலையும் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கையை அரசு கண்டு கொள்ளாமல் போனதாக விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இது குறித்து கத்தாங்கண்ணி விவசாயி ஒருவர் கூறியதாவது:-

கத்தாங்கண்ணி குளத்தில் தண்ணீர் தேக்கும் போது சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் பாசனம் பெற்று வந்தது. இதனால் இ்ப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஒருமுறை குளத்தில் தண்ணீர் நிரம்பி விட்டால் ஆண்டு முழுவதும் தண்ணீர் பிரச்சினை வராது. அப்படிக்கப்பட்ட இந்த குளம் தூர்வாராமல் இருந்தது. இதனால் இப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்று தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மழைக்காலங்களில், நொய்யலில் வரும் வெள்ளநீரை சேமிக்கும் வகையில், வாய்க்கால் மற்றும் குளத்தை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன அதிபர் ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர்களின் உதவியுடன் இந்த குளத்தை தூர்வாரும் பொறுப்பை ஏற்று கொண்டார். இதற்காக கலெக்டர் மற்றும் காங்கேயம் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அனுமதி பெற்று குளம் மற்றும் வாய்க்காலை ரூ.30 லட்சம் செலவில் தூர்வாரினார். அதே போல பழுதடைந்த குளத்தின் கரையும் பலப்படுத்தபட்டுள்ளது. இதன் காரணமாக வாய்க்கால் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அந்த குளம் தண்ணீர் நிரம்பி உள்ளது.இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story