கேரளாவில் கணவர் கொன்று புதைப்பு விஷம் குடித்த பெண், கள்ளக்காதலனுக்கு தீவிர சிகிச்சை


கேரளாவில் கணவர் கொன்று புதைப்பு விஷம் குடித்த பெண், கள்ளக்காதலனுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 10 Nov 2019 10:45 PM GMT (Updated: 10 Nov 2019 9:44 PM GMT)

கேரளாவில் கணவரை கொன்று புதைத்த பெண், கள்ளக்காதலனுடன் விஷம் குடித்த நிலையில் பன்வெலில் உள்ள தங்கும் விடுதியில் மீட்கப்பட்டார். விஷம் குடித்த பெண்ணின் 2 வயது மகள் உயிரிழந்தாள்.

மும்பை, 

நவிமும்பை பன்வெல் பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த ஒரு ஜோடி வந்து உள்ளனர். அவர்கள் கணவன், மனைவி என கூறி அங்கு அறை எடுத்து தங்கியுள்ளர். அவர்களுடன் 2 வயது பெண் குழந்தையும் இருந்து உள்ளது. இந்தநிலையில் அவர்கள் தங்கியிருந்த அறை நேற்று முன்தினம் மதியம் வரை திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மாற்று சாவி மூலம் அறை கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது, அங்கு கேரள ஜோடி மற்றும் அவர்களுடன் வந்த 2 வயது சிறுமி பூச்சி மருந்து குடித்த நிலையில் பேச்சு மூச்சு இன்றி கிடந்தனர்.

போலீசார் உடனடியாக 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அவரை பரி சோதித்த டாக்டர்கள் கூறினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து பன்வெல் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றது கேரளாவை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி வாசிம் அப்துல் (வயது35), லிஜி(28) என்பது தெரியவந்தது. பலியான 2 வயது சிறுமி லிஜியின் மகள் ஜோனா ஆவார்.

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள பண்ணை வீட்டில் வாசிம் அப்துல் மேலாளராக பணியாற்றி உள்ளார். அங்கு லிஜியும் அவரது கணவர் ரிஜோசும் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது வாசிம் அப்துலுக்கும், லிஜிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி தெரிந்துகொண்ட ரிஜோஸ், மனைவியும், வாசிம் அப்துலையும் கண்டித்து உள்ளார். இதையடுத்து வாசிம் அப்துல், லிஜியுடன் சேர்ந்து கணவர் ரிஜோசை கொலை செய்து உடலை பண்ணை வீட்டில் புதைத்து இருக்கிறார்.

பின்னர் அங்கு இருந்து தப்பி பன்வெல் வந்த அவர்கள் போலீசாருக்கு பயந்து சிறுமியுடன் பூச்சி மருந்தை குடித்து உள்ளனர். இதில் சிறுமி பலியாகிவிட்டாா். கள்ளக்காதல் ஜோடி மட்டும் உயிர் பிழைத்து உள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பன்வெல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story