திருச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன


திருச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன
x
தினத்தந்தி 12 Nov 2019 11:15 PM GMT (Updated: 12 Nov 2019 5:42 PM GMT)

திருச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் ஆகியவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் இடிக்கப்பட்டன.

திருச்சி,

திருச்சி -புதுக்கோட்டை சாலையில் குட்ஷெட் மேம்பாலம் இறக்கத்தில் உலகநாதபுரம் பகுதியில் இருந்து டி.வி.எஸ். டோல்கேட்டில் தஞ்சை பஸ் நிறுத்தம் வரை சாலையின் இடது புறம் ஏராளமான வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் இருந்தன. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இந்த பகுதியில் வரிசையாக இருந்த காங்கிரீட் கட்டிடங்களில் ஓட்டல்கள், மாவுமில்கள், மருந்து கடைகள், மளிகை கடைகள், ஜெராக்ஸ் கடைகள் உள்பட பல பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.

ஆக்கிரமிப்பு

கட்டிடங்கள் இருந்த இடம் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்த மானவை என்றும், நெடுஞ் சாலைத்துறை இடத்தில் அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி இருப்பதாகவும் அதிகாரிகள் கூறி வந்தனர். இது தொடர்பாக கட்டிட உரிமையாளர்களுக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் கோர்ட்டில் நடந்து வந்த வழக்குகளில் நெடுஞ்சாலைத்துறையினருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கட்டிட உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் நவம்பர் 12-ந்தேதி ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து தள்ளப்படும், அதற்கு முன்னதாக பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்று நோட்டீசு அனுப்பினர்.

இந்த நோட்டீசுகளை தொடர்ந்து இந்த கட்டிடங்களில் கடைகள் நடத்தி வந்த வியாபாரிகள் நேற்று முன்தினம் இரவே தங்களது பொருட்களை எடுத்து வேறு இடங்களுக்கு மாற்ற தொடங்கினர். இந்நிலையில் நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் ரவிக் குமார், உதவி பொறியாளர் செல்வ கணேஷ் உள்பட அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு வந்தனர்.

இடிக்கப்பட்டன

இதைத்தொடர்ந்து 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. இந்த கட்டிடங்களில் பல இரண்டடுக்கு மாடி கட்டிடங்களாக இருந்தன. அவற்றையும் எந்திரங்கள் இடித்து தள்ளின. ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்தவர்கள் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், டி.வி, கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை தூக்கிக்கொண்டு வெளியே வந்தனர். அதன் பின்னர் அந்த வீடுகளும் இடிக்கப்பட்டன.

ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்தவர்கள், தங்களுக்கு கால அவகாசம் தரவேண்டும், மாற்று இடம் ஒதுக்கவேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்த உங்களுக்கு மாற்று இடம் தர முடியாது, அது எங்கள் வேலை அல்ல என்று பதில் அளித்தனர். இதனால் அவர்கள் என்ன செய்வதென தெரியாமல் தவித்தபடி நின்றனர்.

45 கட்டிடங்கள்

மொத்தம் 45 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டிட இடிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் நிலைய அதிகாரி மெல்க்யூஸ் தலைமையில் தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்திருந்தனர். துணை தாசில்தார் கன்னாமணி, நில அளவை துறை வட்ட துணை ஆய்வாளர் முத்துச்செல்வி உள்பட அதிகாரிகளும் ஆக்கிரமிப்பு கட்டிட இடிப்பு பணிகளுக்கு உதவியாக இருந்தனர்.

போக்குவரத்து நெருக்கடி

ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கும் பணியை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் குட்ஷெட் மேம்பாலம் இறக்கத்தில் இருந்து டி.வி.எஸ். டோல்கேட் வரை ஒரு வழிப்பாதையாக சாலையின் வலது புறத்தில் திருப்பி விடப்பட்டது. இதனால் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.


Next Story