ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 2-வது முறையாக பரோலில் விடுவிப்பு - ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றார்


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 2-வது முறையாக பரோலில் விடுவிப்பு - ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றார்
x
தினத்தந்தி 12 Nov 2019 11:00 PM GMT (Updated: 12 Nov 2019 6:42 PM GMT)

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 2-வது முறையாக ஒரு மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து நேற்று அவர் பலத்த போலீஸ் காவலுடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

ஜோலார்பேட்டை, 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக அவருடைய தாயார் அற்புதம்மாள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசியல் கட்சியினரும் அவரை விடுதலை செய்யவேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.

பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் என்ற ஞானசேகரனின்(வயது 78) உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி முதல் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. 2 மாதம் பரோல் முடிந்ததும் அவர் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட அவர் மூட்டுவலி, சிறுநீரக தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது. இதனால் அவர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் அவருடைய தந்தை குயில்தாசனுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய சகோதரியின் மகள் திருமணமும் நடக்க இருக்கிறது. இதனால் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக்கோரி சிறைத்துறை நிர்வாகத்திடம் மனு அளித்தனர். அதன்பேரில் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து அவர் சென்னை புழல் சிறையில் இருந்து நேற்று அதிகாலை 6 மணியளவில் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். காலை 9.40 மணிக்கு அவர் வேலூர் மத்திய சிறைக்குள் அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு பரோல் வழங்கியதற்கான படிவம் வழங்கப்பட்டது. அதன்பேரில் 10.40 மணிக்கு அவரை வேலூர் சிறையில் இருந்து ஜோலார்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டுக்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையிலான போலீசார் பலத்த காவலுடன் அழைத்து சென்றனர்.

பேரறிவாளன் வருகையை எதிர்பார்த்து அவருடைய தாயார் அற்புதம்மாள் வீட்டுக்கு வெளியே காத்திருந்தார். நண்பகல் 12.20 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் வந்தார். அவரை பார்த்ததும், தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க வரவேற்றார். உறவினர்களும் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். அதை தொடர்ந்து பேரறிவாளனுக்கும், அவர் தங்கும் வீட்டை சுற்றிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இது குறித்து பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறியதாவது:-

2-வது முறையாக பரோலில் எனது மகன் பேரறிவாளன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 28 ஆண்டு இளமையை தொலைத்து சிறைவாசம் அடைந்து மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் அவர் விரைவில் விடுதலை ஆவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். இப்படி இரண்டாவது முறை பரோலில் வீட்டிற்கு வருவதற்கு பரோல் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் எனது மகனை விரைவில் அரசு விடுதலை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Next Story