கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் சாவு - பாம்புக்கு பயந்து ஓடியபோது பரிதாபம்


கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் சாவு - பாம்புக்கு பயந்து ஓடியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 15 Nov 2019 10:30 PM GMT (Updated: 15 Nov 2019 8:26 PM GMT)

பள்ளிப்பட்டு அருகே பாம்புக்கு பயந்து ஓடிய இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.

சென்னை, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே. பேட்டை ஒன்றியம் ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி வித்யா. இவர்களது மகள் சங்கீதா (வயது 19). இவர் நேற்று மாலை தனது தாயார் வித்யாவுடன் சேர்ந்து வீட்டின் பின்புறம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்கள் அருகில் ஒரு பாம்பு ஓடியது. இதை பார்த்த வித்யா பாம்பு, பாம்பு என்று அலறினார். இதில் பயந்து ஓடிய சங்கீதா அங்கு இருந்த கிணற்றில் தவறி விழுந்து மூழ்கினார்.

வித்யா ஓடி சென்று அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்தார். அவர்கள் கிணற்றில் இறங்கி சங்கீதாவை தேடினார்கள். சிறிது நேர தேடலுக்கு பிறகு சங்கீதாவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சங்கீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story