தஞ்சை அருகே, பொக்லின் எந்திரத்தை ஏற்றி வாலிபர் கொலை - நண்பர் படுகாயம்


தஞ்சை அருகே, பொக்லின் எந்திரத்தை ஏற்றி வாலிபர் கொலை - நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 17 Nov 2019 10:30 PM GMT (Updated: 17 Nov 2019 8:23 PM GMT)

தஞ்சை அருகே பொக்லின் எந்திரத்தை ஏற்றி வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். தப்பி ஓடிய கொலையாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர், 

தஞ்சையை அடுத்த அருள்மொழிப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகன் பிரகாஷ் (வயது33). இவரும், அதே பகுதி பெரியதைக்கால் தெருவை சேர்ந்த பாரதி (33), தஞ்சை ஞானம்நகரை சேர்ந்த சத்தியராஜ் ஆகிய 3 பேரும் நண்பர்கள். இவர்கள் 3 பேரும் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தஞ்சை ஞானம் நகர் அருகே ஒன்றாக சந்தித்து பேசி கொண்டு இருந்தனர். அப்போது 3 பேரும் மது அருந்தினர். அந்த நேரத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சத்தியராஜ் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பொக்லின் எந்திரத்தை ஓட்டி சென்று பிரகாஷ், பாரதி ஆகிய 2 பேர் மீது ஏற்றினார்.

இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பிரகாஷ் ரத்தவெள்ளத்தில் பலியானார். பாரதி படுகாயமடைந்தார். உடனே சம்பவ இடத்தில் இருந்து சத்தியராஜ் தப்பி ஓடி விட்டார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய சத்தியராஜை வலைவீசி தேடி வருகின்றனர். பொக்கலின் எந்திரத்தை ஏற்றி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story