முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை


முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 19 Nov 2019 11:15 PM GMT (Updated: 19 Nov 2019 6:48 PM GMT)

பண்ருட்டியில் முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அடுத்த கோட்லாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் மாரி என்கிற மதன்குமார்(வயது 22). மெக்கானிக். இதேபோல் பண்ருட்டி அருகே உள்ள தொரட்டிப்பாடியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகள் சுவாதி(21). டிப்ளமோ நர்சிங் படித்து முடித்து, தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக வேலை செய்து வந்தார்.

மாரியும், சுவாதியும் உறவினர்கள் ஆவார்கள். இதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவரவே பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் சுவாதிக்கு மாரி அண்ணன் முறையாவார். ஆகையால் முறைதவறிய இந்த காதலுக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்ததுடன், திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்துவிட்டனர்.

கடந்த ஒரு மாதமாக காதல் ஜோடி தங்களது குடும்பத்தினரிடம் சரியான முறையில் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து, திருமண பந்தத்தில் தான் இணைய முடியவில்லை, சாவிலாவது ஒன்றாக இணைவோம் என்ற முடிவுக்கு காதல் ஜோடி சென்றது.

இதையடுத்து நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களது பெற்றோர் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இரவு 11.30 மணிக்கு பண்ருட்டி ரெயில் நிலையம் அருகே வந்தனர். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. ரெயில் தங்களுக்கு அருகே வந்தவுடன் காதல் ஜோடி இருவரும் ரெயில் முன் பாய்ந்தனர். இதில் ரெயிலில் சிக்கிய அவர்கள் உடல் துண்டுதுண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். பின்னர் இதுகுறித்து பண்ருட்டி ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்த ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனர்.

காதல் ஜோடியின் தற்கொலை குறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த தங்களது மகள் மற்றும் மகனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story