போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 7 மாடுகள் ஏலம் விடப்பட்டது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 7 மாடுகள் ஏலம் விடப்பட்டது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 19 Nov 2019 10:45 PM GMT (Updated: 19 Nov 2019 9:19 PM GMT)

வேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 7 மாடுகள் மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.

வேலூர்,

வேலூர் நகரில் முக்கிய சாலைகள், பழைய மற்றும் புதிய பஸ்நிலையங்கள், முக்கிய சந்திப்புகள் போன்ற இடங்களில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இரவு நேரங்களில் சாலைகளிலேயே படுத்துக் கிடக்கின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

எனவே சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

அதன்பேரில் வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்குட்பட்ட சத்துவாச்சாரி, பழைய பஸ்நிலையம், ஆற்காடு ரோடு போன்ற பகுதிகளில் சுற்றித்திரிந்த 5 மாடுகள் கடந்த சிலநாட்களுக்கு முன்பு பிடிக்கப்பட்டு ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆற்காடு ரோடு, காட்பாடி ரோடு மற்றும் கிரீன்சர்க்கிள் பகுதிகளில் சுற்றித்திரிந்த 7 மாடுகளை சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். இந்த 7 மாடுகளும் நேற்று காலை ரூ.21 ஆயிரத்து 500-க்கு ஏலம் விடப்பட்டது.

தொடர்ந்து நேற்று மீண்டும் ஆற்காடு ரோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 9 கன்றுக்குட்டிகள், ஒரு பசுமாடு ஆகியவை பிடிபட்டது. சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை அதன் உரிமையாளர்களே பிடித்து வீடுகளில் கட்டி வைக்கவேண்டும், இல்லையென்றால் பிடித்து ஏலம் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story