அரியலூர் கலெக்டரின் கார் மோதியதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி சாவு


அரியலூர் கலெக்டரின் கார் மோதியதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி சாவு
x
தினத்தந்தி 20 Nov 2019 10:45 PM GMT (Updated: 20 Nov 2019 5:45 PM GMT)

அரியலூர் கலெக்டரின் கார் மோதியதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி சாவு.

பெரம்பலூர்,

பெரம்பலூரை அடுத்த துறைமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகள் கீர்த்திகா (வயது 21). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் துறைமங்கலம் மூன்று ரோடு அருகே சாலையை கடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, கீர்த்திகா ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த கீர்த்திகா பெரம்பலூர் மற்றும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்திகா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் யாருடையது? என்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது விபத்தை ஏற்படுத்தியது அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னாவின் கார் என்பது தெரியவந்தது. சம்பவத்தன்று அரியலூர் கலெக்டர் ரத்னாவின் பெற்றோரை காரில் அழைத்துக்கொண்டு, அதன் டிரைவர் அரியலூர் நோக்கி சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story