‘லிப்ட்’ கேட்டு வந்த போது பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி - மகள் காயம்


‘லிப்ட்’ கேட்டு வந்த போது பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி - மகள் காயம்
x
தினத்தந்தி 28 Nov 2019 10:30 PM GMT (Updated: 28 Nov 2019 5:50 PM GMT)

மாரண்ட அள்ளி அருகே ‘லிப்ட்’ கேட்டு வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலியானார். அவருடைய மகள் லேசான காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாலக்கோடு, 

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மாள்(வயது 63). நேற்று முன்தினம் இரவு இவரும், இவருடைய மகள் மங்கம்மாளும் பாலக்கோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஊருக்கு அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஊருக்கு வருவதற்கு அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு வந்துள்ளனர்.

மாரண்ட அள்ளி போலீஸ் நிலையம் முன்பு அவர்களின் மோட்டார் சைக்கிள் வந்த போது, நிலைதடுமாறி கீழே சரிந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தாய், மகள் இருவரும் தவறி கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மூதாட்டி சின்னம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய மகள் மங்கம்மாள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதை பார்த்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர், அங்கிருந்து மோட்டார்சைக்கிளுடன் தப்பிச்சென்று விட்டார்.

இந்த விபத்து குறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story