கல்வித்துறையில் தமிழக அரசு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு


கல்வித்துறையில் தமிழக அரசு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
x
தினத்தந்தி 1 Dec 2019 10:15 PM GMT (Updated: 1 Dec 2019 6:13 PM GMT)

கல்வித்துறையில் தமிழக அரசு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு 5.34 ஏக்கர் பரப்பளவில் ரூ.8 கோடி மதிப்பில் அமையவுள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக மக்கள் யாரிடமும் கையேந்தக்கூடாது என்கிற உயர்ந்த நோக்கத்தோடு தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு சிறப்பான திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். மேலும், தமிழ்நாட்டின் மாணவ-மாணவிகள் உலகநாடுகளுக்கு இணையாக, உலகத்தரம் வாய்ந்த கல்வியை கற்றால்தான், நவீன அறிவியல் உலகத்தில் போட்டியிட்டு தமிழகத்தை தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல இயலும். தமிழகத்தில் இல்லாமை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு பள்ளிகல்வி மற்றும் உயர்கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அதுமட்டுமல்லாமல், கோவை மாவட்டத்திற்கு 50 ஆண்டு காலத்தில் இல்லாத வளர்ச்சித்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வி பயில போதுமான சூழலை ஏற்படுத்திடும் வகையில் மேம்படுத்தப்பட்ட பள்ளிக்கட்டிடங்கள், அறிவியில் ஆய்வுக்கூடங்கள், கிராம நூலக கட்டிடங்கள் என அனைத்து கட்டமைப்புகளிலும் முதன்மை மாவட்டமாக கோவை திகழ்ந்து வருகிறது.

12-ம் வகுப்பு வரை சைக்கிள்கள், மடிக்கணினி, 14 வகையான கல்வி உபகரணங்கள் என பலவும் வழங்கி பள்ளிக்கல்வி முழுமை பெறச் செய்த போதிலும், கல்லூரி கல்வி படிக்கும் மாணவர்களின் சேர்க்கை குறைந்து உள்ளதை கருத்தில் கொண்டு, தேவைகளின் அடிப்படையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

தனியார் கல்லூரிகளில் ரூ.35 ஆயிரம் வரை செலுத்தக்கூடிய பட்டப்படிப்புகள் அனைத்தும் ஒரு பருவத்திற்கு அரசுக் கட்டணத்தில் ரூ.2 ஆயிரம் மட்டுமே என்பதால் ஏழை எளிய மாணவ-மாணவிகளின் கல்வி வேட்கையின் ஆறுதல் மையங்களாக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் விளங்குகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் பல ஆண்டுகள் கோரிக்கையாக இருந்த தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் பல்லடம் ஆகிய பகுதிகளில் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கி கிராமப்புற மாணவர்கள் வாழ்வில் ஓளியேற்றி வைத்தது தமிழக அரசாகும். மேலும் கோவை ஆர்.எஸ்.புரத்தில் அன்னைதெரசா மகளிர் கல்லூரியும் தொடங்கி சரித்திர சாதனை படைத்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், ஆயிரத்து 80 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 6 பாடப்பிரிவுகளின் கீழ் கல்வி பயிற்றுவிக்க 23 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், தொண்டாமுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் செயல்பட்டும் வரும் இந்த கல்லூரியானது, தன்னிறைவுடன் செயல்பட 5.36 ஏக்கர் பரப்பளவில் ரூ.8 கோடி மதிப்பில், 3 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது.

மேலும் இந்த கட்டிடத்தில் முதல்வர் அறை, துறை தலைவர்கள் அறை, கல்லூரி அலுவலகம் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது. மக்களைத்தேடி அரசு நிர்வாகம் எனற உயரிய நோக்கில் முதல்-அமைச்சரால் குறைதீர்ப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தொண்டாமுத்தூர் பகுதியில் தொண்டாமுத்தூர், தென்கரை, மத்துவராயபுரம், கரடிமடை, ஆர்.எஸ்.புரம், ஆலந்துரை, பூலுவபட்டி, தெலுங்குபாளையம், பேரூர் உள்பட 16-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. இந்த முகாம்களில் 4 ஆயிரத்து 774 பயனாளிகளுக்கு ரூ.53.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நலத்திட்டங்கள் வேண்டி 4 ஆயிரத்து 962 பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

அதுபோலவே, கோவை மாவட்டத்தில், நடைபெற்ற முகாம்களில் 28 ஆயிரத்து 561 மனுக்கள் பெறப்பட்டு, 22 ஆயிரத்து 386 மனுக்கள் ஏற்கப்பட்டு உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அம்மனுக்களுக்கான நலத்திட்ட உதவிகளும் பரிசீலினை செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து மத்வராயபுரம் ஊராட்சியைச் சேர்ந்த மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையினை ஏற்று நடைபெற்ற விழாவில் 53 பயனாளிகளுக்கு ரூ.1.8 கோடி மதிப்பில் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களை அமைச்சர் வழங்கினார்.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம துரைமுருகன், பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் காளிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், கோட்ட வருவாய் அதிகாரி தனலிங்கம் மற்றும் தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் டி.எஸ். ரங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் செல்வதுரை, மாவட்ட பொருளாளர் என்.எஸ். கருப்பசாமி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜி.கே. விஜயகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.ஏ. சந்திரசேகர், முன்னாள் தொண்டாமுத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் வி. மதுமதி விஜயகுமார், தொண்டாமுத்தூர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெயபால், தேவராயபுரம் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆறுச்சாமி, கெம்பனூர் கதிரவன், கெம்பனூர் ரவி, நகர செயலாளர் ஜி.வி.சண்முகம், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத்சிங், தொண்டாமுத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story