சிறுமியை திருமணம் செய்த வாலிபர் 1½ ஆண்டுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் 1½ ஆண்டுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 1 Dec 2019 10:15 PM GMT (Updated: 1 Dec 2019 9:22 PM GMT)

சிறுமியை திருமணம் செய்த வாலிபரை 1½ ஆண்டுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 24). இவருக்கும், 15 வயது சிறுமிக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து வேலுச்சாமியுடன் அந்த சிறுமி ஒரு வீட்டில் தனியாக குடும்பம் நடத்தி வந்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

இதையடுத்து நிறைமாத கர்ப்பிணியான அந்த சிறுமியை வேலுச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் பிரசவத்திற்காக ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த சிறுமியை டாக்டர் பரிசோதனை செய்தபோது அந்த சிறுமி திருமண வயது அடையும் முன்பே கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது.

வாலிபர் கைது

இதையடுத்து குளித்தலை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த சிறுமி திருமண வயது அடைவதற்கு முன்பே அவருக்கு திருமணம் நடந்ததும், தற்போது அந்த சிறுமி நிறைமாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. மேலும் அந்த சிறுமிக்கு பிரசவவலி வராததால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டது. புகாரின்பேரில் போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து, வேலுச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story