உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் பாதியில் நிறுத்தம்


உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் பாதியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 2 Dec 2019 10:15 PM GMT (Updated: 2 Dec 2019 4:17 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முதல் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, பட்டா, பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் கொடுத்துள்ள மனுவில், திருப்பத்தூர் ஒன்றியத்தில் முறைகேடாக தொடக்கக்கல்வி துறையில் பதவி உயர்வு வழங்கிய வட்டார கல்வி அலுவலர் தென்னவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

கலெக்டர் சிவன் அருள், பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிக்கொண்டிருந்த போது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், உடனடியாக தேர்தல் விதி முறைகள் அமலுக்கு வந்தது. இதனால் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்குவது பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மனுக்கள் கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கூட்டத்தில் சப்-கலெக்டர் வந்தனா கார்க், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story