நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 2 Dec 2019 10:00 PM GMT (Updated: 2 Dec 2019 5:10 PM GMT)

நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி, 

தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் சிற்றாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.

இந்த நிலையில் நேற்று தென்காசியில் லேசான சாரல் மழையே பெய்தது. மேலும் மலைப்பகுதியிலும் மழை குறைந்தது. இதனால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர்.

இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து சென்றனர். ஆனால், பழைய குற்றாலம் அருவியில் மட்டும் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. நீர்வரத்து குறைந்ததும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story