சேலத்தில், முகவரி கேட்பது போல் நடித்து நடை பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


சேலத்தில், முகவரி கேட்பது போல் நடித்து நடை பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Dec 2019 10:30 PM GMT (Updated: 4 Dec 2019 7:07 PM GMT)

சேலத்தில் முகவரி கேட்பது போல் நடித்து நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம், 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பஞ்சுகாளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மனைவி பத்மா(வயது 56). இவர் சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மகன் வீட்டுக்கு வந்தார்.

நேற்று அதிகாலை பத்மா அருண்நகர் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

அவர்கள் பத்மா அருகே வந்ததும் முகவரி கேட்பதுபோல் அவரிடம் கேட்டனர். இதற்கு அவர் இந்த முகவரி தனக்கு தெரியாது என்று அவர்களிடம் தெரிவித்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மர்ம நபர் திடீரென பத்மா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் என்று கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வருவதற்குள் நகையுடன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story