மதுரையில் எதன் அடிப்படையில் புதிதாக சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன? மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


மதுரையில் எதன் அடிப்படையில் புதிதாக சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன? மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Dec 2019 10:15 PM GMT (Updated: 5 Dec 2019 6:51 PM GMT)

மதுரை 4 வழிச்சாலையில் எதன் அடிப்படையில் புதிதாக 3 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன? என மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.. மதுரை கே.கே.நகரை சேர்ந்த இ்மானுவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை,

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக்கழகம் சார்பில் மதுரை உத்தங்குடியில் இருந்து கப்பலூர் வரையிலான சுற்றுச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த சாலையில் தற்போது மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி ஆகிய 3 இடங்களில் டோல்கேட் (சுங்கச் சாவடி) மையம் அமைக்கப் பட்டு, கடந்த 22-ந்தேதி முதல் செயல்படுகின்றன.

மதுரை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மேலூர் சிட்டம்பட்டி, தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, திருமங்கலம் சாலையில் கப்பலூர் என 3 சுங்கச்சாவடிகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

தற்போது சென்னையில் இருந்து விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் மதுரை மாவட்டத்தில் மட்டும் சிட்டம்பட்டி, மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி(விமானநிலையம் அருகில்), கப்பலூர் என 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளின்படி, 4 வழிச்சாலையில் 60 கிலோ மீட்டர் தூரத்தில்தான் சுங்கச்சாவடி கட்டண வசூல் மையம் அமைக்க வேண்டும். மேலும் அதில் செல்லும் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 0.65 பைசா தான் வசூலிக்க வேண்டும். ஆனால் மதுரை மாவட்டத்தில் மஸ்தான்பட்டியில் இருந்து விமானநிலையம் அருகில் உள்ள பரம்புப்பட்டி (விமானநிலையம் அருகில்) வரை 27 கிலோ மீட்டருக் குள் 3 சுங்கச்சாவடி மையங்களில் இந்த வாகனங்களிடம் இருந்து ரூ.60 வசூலிக்கப்படுகிறது. இது நெடுஞ்சாலை ஆணைய விதிகளுக்கு புறம்பானது.

எனவே குறிப்பிட்ட தூரத்தில் 3 சுங்கச்சாவடி மையம் அமைக்க அனுமதித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். அந்த சுங்கச்சாவடிகள் செயல்பட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல மதுரையை சேர்ந்த வக்கீல் விஜயராஜா என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இம்மானுவேல் சார்பில் ஆஜரான வக்கீல் லஜபதிராய், ’தேசிய நெடுஞ்சாலைகளுக்கு என விதிகள் உள்ளன. ஆனால் மாநில அளவில் இது வரையறுக்கப்படவில்லை. 2017-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணை அடிப்படையில் தற்போது சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு ஆம்புலன்சு செல்வதற்கு அவசர வழிகள் இல்லை. சுங்கச்சாவடிகளை மேற்பார்வையிட உரிய அதிகாரி நியமிக்கப்படவில்லை. பெரும்பாலான விதிகள் பின்பற்றப்படவில்லை. ஐகோர்ட்டு உத்தரவும் கடைபிடிக்கப்படவில்லை. எதன் அடிப்படையில் மதுரையில் புதிதாக குறுகிய தூரத்தில் 3 சுங்கச்சாவடிகள் அமைப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்பதும் தெரியவில்லை. எனவே அதை ரத்து செய்ய வேண்டும்‘ என்றார்.

விசாரணை முடிவில், இதுகுறித்து மத்திய, மாநில அசுகள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story