கல்பாக்கம் அருகே இரும்பு கடையில் திருடிய வழக்கில் 5 பேர் கைது


கல்பாக்கம் அருகே இரும்பு கடையில் திருடிய வழக்கில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2019 10:15 PM GMT (Updated: 5 Dec 2019 7:49 PM GMT)

கல்பாக்கம் அருகே இரும்பு கடையில் திருடிய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை பல்லவன் நகரில் இரும்பு கடை நடத்தி வருபவர் சுரேஷ். இங்கு இரும்பு , தாமிரம், பித்தளையால் ஆன பொருட்கள் விற்கப்படுகிறது. கடந்த மாதம் 22-ந் தேதி காலை சுரேஷ் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 500 கிலோ தாமிரம், 40 கிலோ பித்தளை வால்வுகள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து சுரேஷ் கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமு தலைமையிலான போலீசார் கடந்த 3-ந் தேதி அதிகாலை 5 மணியளவில் புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வேகமாக வந்த ஒரு காரை இன்ஸ்பெக்டர் ராமு மடக்கி நிறுத்தினார். அந்த காரில் 5 பேர் இருந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னை பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 50), அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (24), தீபக் (23), முனியா (30) மற்றும் காத்தவராயன் என்பது தெரியவந்தது.

இரும்பு கடையில் திருடியது இவர்கள்தான் என்பதும், 200-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட கமலக்கண்ணன் தான் இந்த கும்பலுக்கு தலைவன் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கம் காட்டில் மறைத்து வைத்திருந்த தாமிரம் மற்றும் பித்தளை வால்வுகளை அவர்கள் 5 பேரும் போலீசாருக்கு அடையாளம் காட்டினர். அவற்றை போலீசார் கைப்பற்றினர். 5 பேரையும் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story