கிராமப்புற உற்பத்தி திட்டத்தின் கீழ் பழ மரக்கன்றுகள் பெற தோட்டக்கலை பண்ணைகளை அணுகலாம் - கலெக்டர் தகவல்


கிராமப்புற உற்பத்தி திட்டத்தின் கீழ் பழ மரக்கன்றுகள் பெற தோட்டக்கலை பண்ணைகளை அணுகலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Dec 2019 10:45 PM GMT (Updated: 6 Dec 2019 5:24 PM GMT)

கிராமப்புற உற்பத்தி திட்டத்தின் கீழ் பழ மரக்கன்றுகள் பெற தோட்டக்கலை பண்ணைகளை அணுகலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டி,

மனித ஆரோக்கியத்துக்கு தேவையான சரிவிகித உணவு வழங்குவதில் காய்கறிகள், பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன்படி ஒவ்வொரு மனிதனும் தினமும் 300 கிராம் காய்கறிகளும், 100 கிராம் பழங்களும் உண்ண வேண்டும் என ஆய்வு கூறுகிறது. தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொருவருக்கும் 207 கிராம் காய்கறி மற்றும் 197 கிராம் பழங்கள் என்ற அளவில் உற்பத்தியானாலும், நபர் ஒருவருக்கு 103 கிராம் காய்கறிகள், 79 கிராம் பழங்கள் தான் கிடைக்கின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்க செய்வதற்கு, காய்கறி மற்றும் பழப்பயிர்களின் உற்பத்தியை உயர்த்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை அவர்களின் வீட்டுத்தோட்டத்திலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் கிராமப்புற காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளார். காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்டு உள்ள இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் 25 ஏக்கர் காய்கறி பயிர்கள் சாகுபடியையும், 5 ஏக்கர் பழப்பயிர்கள் சாகுபடியையும் அதிகப்படுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி பழ மரக்கன்றுகள் தேவைக்கு அருகில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளையோ அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனரையோ அணுகலாம். ஒவ்வொரு விவசாயியும் தங்களிடம் உள்ள விளைநிலத்தில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பரப்பில் காய்கறிகள் மற்றும் பழப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டில் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், பழ மரக்கன்றுகள், நிழல்வலை கூடங்கள், வேளாண் எந்திரங்கள், மண்புழு தயாரிப்பு மையம், தேனீ வளர்ப்பு, அறுவடைக்கு பின் செய்வதற்கு தேவையான உட்கட்டமைப்புகளுக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

மக்களின் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்ட அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்ய இயலும். எனவே இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story