வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த 3 பேர் கடலில் மூழ்கி சாவு


வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த 3 பேர் கடலில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 7 Dec 2019 10:30 PM GMT (Updated: 7 Dec 2019 7:02 PM GMT)

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த 3 பேர் கடலில் மூழ்கி இறந்தனர்.

வேளாங்கண்ணி,

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை வள்ளலார் தெருவை சேர்ந்தவர் ராமகிரு‌‌ஷ்ணன். இவருடைய மகன் கண்ணன்(வயது 23), கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் சேகர் மகன் நரசிம்மன்(16), கோவை பெரிய நாயக்கன்பாளையம் ராம கிரு‌‌ஷ்ணா லே-அவுட் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கண்ணன்(20) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் தொட்டனம்பட்டியை சேர்ந்த வேல்முருகன் மகன் பிரகா‌‌ஷ்(22), மகாலட்சுமி நகர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த மாரி மகன் மணி(20), அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன்கள் கணேசன்(22). பாண்டி(24).

இவர்கள் 7 பேரும் நண்பர்கள். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர்கள் 7 பேரும் கடந்த 3-ந் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர்.

கடலில் குளித்தனர்

நேற்று முன்தினம் மாலை வேளாங்கண்ணியில் உள்ள கடலில் ராமகிரு‌‌ஷ்ணன் மகன் கண்ணன், பிரகா‌‌ஷ் நரசிம்மன், மணி ஆகிய 4 பேரும் குளித்துக்கொண்டு இருந்தனர். மற்ற 3 பேரும் கரையில் இருந்தனர்.

அப்போது குளித்து கொண்டிருந்த 4 பேரையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்த கரையில் நின்று கொண்டிருந்த நண்பர்கள், அவர்களை தேடினர். ஆனால் கிடக்கவில்லை.

3 பேர் பலி

இதுகுறித்து வேளாங்கண்ணி கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து இறங்கி கடலுக்குள் இறங்கி தேடினர். இதற்கிடையே மாயமான கண்ணன் நீந்தி சென்று செருதூர் கடற்கரை பகுதியில் கரை ஏறினார். மற்ற 3 பேரையும் காணவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை வானவன்மகாதேவி கடற்கரையில் பிரகா‌‌ஷ், மணி ஆகிய 2 பேரின் உடல்களும், பிரதாபராமபுரம் கடற்கரையில் நரசிம்மன் உடலும் கரை ஒதுங்கின.

தகவல் அறிந்த கடலோர காவல்படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த இடத்தில் கடலில் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story