மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியாக தூக்கி செல்லும் அவலம்


மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியாக தூக்கி செல்லும் அவலம்
x
தினத்தந்தி 11 Dec 2019 11:00 PM GMT (Updated: 11 Dec 2019 5:54 PM GMT)

மயிலாடுதுறை அருகே மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியாக தூக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே சோழசக்கரநல்லூர் கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ளவர்கள் இறந்தால் அவர்களின் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்து செல்ல சாலை வசதி கிடையாது. மேலும் மயானம் வயல் பகுதியில் இருப்பதால் இறந்தவரின் உடலை மெயின் ரோட்டில் இருந்து வயலில் இறங்கி தூக்கி செல்லும் அவலநிலை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எனவே இந்த பகுதி பொதுமக்கள் மயானத்திற்கு செல்ல சாலை வசதி செய்து தரக்கோரி பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் சோழசக்கரநல்லூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சுந்தரம்பாள் (வயது 60). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் மிகுந்த சிரமத்துடன் நெல் மகசூல் செய்துள்ள வயலில் இறங்கி மயானத்திற்கு தூக்கி சென்று உடலை அடக்கம் செய்தனர்.

நடவடிக்கை

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இதுவரை சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை.

இதனால் வயலில் இறங்கி இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, மயானத்திற்கு செல்ல சாலை வசதி உடனே ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story