டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர் மலைப்பாதையில் கர்ப்பிணிக்கு பிரசவம்


டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர் மலைப்பாதையில் கர்ப்பிணிக்கு பிரசவம்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:30 PM GMT (Updated: 12 Dec 2019 5:03 PM GMT)

ஊசூர் அருகே டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி வந்த போது மலைப்பாதையில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அடுக்கம்பாறை, 

வேலூர் மாவட்டம் ஊசூர் அருகே அத்தியூரை அடுத்த சிவநாதபுரம் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் குருமலை, நச்சுமேடு, வெள்ளக்கல்மேடு ஆகிய 3 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மலைப்பகுதிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் குருமலையில் மருத்துவ வசதி கிடையாது.

குருமலை பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவருடைய மனைவி ஸ்ருதி (வயது 20). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை டோலி கட்டி மலையில் இருந்து கீழே தூக்கி வந்தனர்.

பாதி வழியில் வந்தபோது ஸ்ருதிக்கு பிரசவ வலி அதிகரித்ததால் அப்பகுதி மக்கள் ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சுடன் வட்டார மருத்துவ அலுவலர் சிவகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் வந்தனர்.

இதையடுத்து மலை பாதையிலேயே பிரசவம் பார்த்தனர். இதில் சுகப்பிரசவத்தில் ஸ்ருதிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் தாயையும், சேயையும், மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸ் மூலம் ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பிரசவத்துக்கு பிறகு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. தாயும், சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story