காய்கறிகள், பழங்கள் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு திட்டம் - கலெக்டர் தகவல்


காய்கறிகள், பழங்கள் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு திட்டம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 Dec 2019 10:30 PM GMT (Updated: 17 Dec 2019 6:53 PM GMT)

காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி, 

மனித ஆரோக்கியத்திற்கு தேவையான சரிவிகித உணவு வழங்குவதில் காய்கறிகளும், பழங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன்படி, ஒவ்வொரு மனிதனும் தினமும் 300 கிராம் காய்கறிகளும், 100 கிராம் பழங்களும் உண்ண வேண்டும் என ஆய்வு கூறுகிறது.

தமிழகத்தில் சராசரியாக ஒவ்வொருவருக்கும் 207 கிராம் காய்கறி மற்றும் 197 கிராம் பழங்கள் என்ற அளவில் உற்பத்தி ஆனாலும், நபர் ஒருவருக்கு 103 கிராம் காய்கறிகளும், 79 கிராம் பழங்களும் தான் கிடைக்கின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்க காய்கறி மற்றும் பழப்பயிர்களின் உற்பத்தியை உயர்த்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, ஒவ்வொரு வீட்டிற்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை, அவர்களின் வீட்டுத் தோட்டத்திலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், கிராமப்புற காய்கறி உற்பத்தி திட்டத்தை முதல்-அமைச்சர் அறிமுகப்படுத்தி உள்ளார். காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் 25 ஏக்கர் காய்கறி பயிர்கள் சாகுபடியையும், 5 ஏக்கர் பழப்பயிர்கள் சாகுபடியையும் அதிகப்படுத்த வேண்டும் என தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த கிராமப்புற காய்கறி உற்பத்தித் திட்டத்தின் கீழ் ஒரு கிராம பஞ்சாயத்தில் 100 விலையில்லா காய்கறி விதை தளைகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விதை தளையிலும், கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, பாகல், புடலங்காய், முருங்கை ஆகிய 7 விதமான காய்கறி விதைகளும், இக்காய்கறிகளை சாகுபடி செய்வதற்கு தேவையான இயற்கை உரமும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 31 ஆயிரம் 500 காய்கறி தளைகள் வினியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வினியோகிக்கப்பட்டு வருகின்றன. பழ மரக்கன்றுகள் தேவைக்கு அருகில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையையோ அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனரையோ அணுகலாம்.

தமிழக மக்களின் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ள இத்திட்டத்தின் மூலம் அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்ய இயலும் என்பதால், இந்த வாய்ப்பை அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story