திருக்கோவிலூர் அருகே, விவசாயி அடித்துக்கொலை - 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


திருக்கோவிலூர் அருகே, விவசாயி அடித்துக்கொலை - 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Dec 2019 11:15 PM GMT (Updated: 21 Dec 2019 11:14 PM GMT)

திருக்கோவிலூர் அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள கீழக்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன்(வயது 55). விவசாயி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கலியபெருமாள்(65), இவரும் விவசாயி ஆவார். இவர்கள் இருவருக்கும் அதே ஊரில் அருகருகே நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அதேப்போல் நேற்றும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கலியபெருமாள், அவரது மகன்கள் மனோகரன், ராஜீவ்காந்தி, மனைவி கிரு‌‌ஷ்ணம்மாள், மருமகள்கள் சுகந்தி, ஆனந்தி ஆகிய 6 பேரும் சேர்ந்து நாராயணனை அடித்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த நாராயணனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நாராயணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது பற்றி தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று நாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கலியபெருமாள் உள்பட 6 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story