சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல் - 9 பேரிடம் விசாரணை


சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல் - 9 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 27 Dec 2019 11:15 PM GMT (Updated: 27 Dec 2019 7:43 PM GMT)

தாய்லாந்து, துபாய், மலேசியா, கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 3½ கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 9 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த மதுரையைச் சேர்ந்த பஷீர் அகமது (வயது 35), சென்னையைச் சேர்ந்த முகமது சதாம் உசேன் (28) மற்றும் மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த திருச்சியைச் சேர்ந்த முகமது பாசில்(22) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

அதில் 3 பேரும் உள்ளாடைக்குள் தங்க சங்கிலி மற்றும் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடம் இருந்தும் ரூ.80 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த தர்மலிங்கம்(45), முத்து ராமலிங்கம் (40), ராமமூர்த்தி (39), நித்யா மணிகண்டன் (28) ஆகிய 4 பேரை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.

பின்னர் 4 பேரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது டிராலி சூட்கேசின் கைப்பிடியை சந்தேகத்தின்பேரில் பிரித்து பார்த்தபோது அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 4 பேரிடம் இருந்தும் ரூ.25 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 641 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் துபாயில் இருந்து சென்னைவந்த விமானத்தில் பயணம் செய்த மதுரையைச் சேர்ந்த மஸ்தான் கனி(33), சுல்தான் சையத் இப்ராகிம் (32) ஆகியோரையும் சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர்கள் 2 பேரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.34 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 862 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் 9 பேரிடமும் இருந்து ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 503 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இந்த தங்கத்தை யாருக்காக வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர்? என பிடிபட்ட 9பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story