குடும்ப பிரச்சினையில், 2 குழந்தைகளுக்கு உணவில் வி‌ஷம் கலந்து கொடுத்து மெக்கானிக் தற்கொலை முயற்சி


குடும்ப பிரச்சினையில், 2 குழந்தைகளுக்கு உணவில் வி‌ஷம் கலந்து கொடுத்து மெக்கானிக் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 1 Jan 2020 10:15 PM GMT (Updated: 1 Jan 2020 12:57 PM GMT)

விழுப்புரம் அருகே குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளுக்கு உணவில் வி‌ஷம் கலந்து கொடுத்து மெக்கானிக் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் பஞ்சாயத்து போர்டு தெருவில் வசித்து வந்தவர் ரவி மகன் சுரேஷ் (வயது 33). மெக்கானிக்கான இவர் அதே பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி பூங்கொடி (30). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. குணஸ்ரீ (6) என்ற மகளும், ரியாஸ் (4) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் சுரேசுக்கும், அவரது மனைவி பூங்கொடிக்கும் கடந்த சில மாதங்களாக அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்று காலையிலும் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டு அன்றுகூட வீட்டில் மகிழ்ச்சி இல்லாமல் குடும்ப பிரச்சினையாக உள்ளதே என்று எண்ணி சுரேஷ் மிகவும் மனமுடைந்தார்.

இந்த சூழலில் பூங்கொடி, வீட்டில் இருந்து வெளியே கடைக்கு சென்றார். அப்போது மனமுடைந்து காணப்பட்ட சுரேஷ் தனது குழந்தைகளுடன் தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து உணவில் வி‌ஷத்தை கலந்து தன்னுடைய 2 குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். பின்னர் அந்த வி‌ஷம் கலந்த உணவை சுரேசும் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் 3 பேரும் வாயில் நுரைதள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்தனர்.

இதனிடையே கடைக்கு சென்றிருந்த பூங்கொடி வீடு திரும்பினார். அப்போது வீட்டினுள் தனது கணவன் மற்றும் 2 குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வளவனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்கள் 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளுக்கு உணவில் வி‌ஷத்தை கலந்துகொடுத்துவிட்டு தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story