வேலூர், மாணவிகள் உள்பட 3 பேர் கடலில் மூழ்கி பலி


வேலூர், மாணவிகள் உள்பட 3 பேர் கடலில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 2 Jan 2020 10:00 PM GMT (Updated: 2 Jan 2020 1:57 PM GMT)

திருப்பதியைச் சேர்ந்த மாணவிகள் உள்பட 3 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். உயிர் பிழைத்தவர், தன்னை ஏழுமலையான் காப்பாற்றி விட்டதாக, தெரிவித்தார்.

திருமலை, 

திருப்பதி லீலா மகால் அருகில் வசிப்பவர்கள் தேராங்குல ராதாகிருஷ்ணா. இவருடைய மகள் தேராங்குல சோனியா (வயது 21). இவர் திருப்பதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய உறவினர் ரகுவின் மகள் பத்தில சோனியா, திருப்பதியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். திருப்பதி சத்தியநாராயணபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்டோ டிரைவர் மது (23), சந்திரசேகர்.

4 பேரும் ஆங்கில புத்தாண்டையொட்டி கடலில் குளிப்பதற்காக டிசம்பர் மாதம் 31–ந்தேதி இரவு 7.30 மணியளவில் திருப்பதியில் இருந்து ஒரு காரில் புறப்பட்டு நெல்லூர் மாவட்டம் சூப்பிபாளையம் கடற்காரைக்குச் சென்றனர். அன்று இரவே 4 பேரும் கடலில் குளிக்க முயன்றனர். அவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்தனர். இரவு 11 மணியளவில் அவர்கள் மீண்டும் கடற்கரைக்குச் சென்றனர். அவர்களை போலீசார் மீண்டும் தடுத்தனர்.

இரு முறை குளிக்காமல் திரும்பி வந்த அவர்கள், ஆங்கில புத்தாண்டு அன்று காலை 6 மணியளவில் கடலில் குளிக்கச் சென்றனர். அப்போது கடலின் ஆழமான பகுதிக்குச் சென்றபோது, 4 பேரும் தண்ணீரில் மூழ்கினர். அவர்கள் தத்தளித்ததைப் பார்த்த மீனவர்கள் விரைந்து வந்து சந்திரசேகரை மட்டும் உயிருடன் மீட்டனர். 3 பேரை மீட்க முடியவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி இறந்தனர்.

திருப்பதிக்கு வந்த சந்திரசேகர் நிருபர்களிடம் கூறுகையில், ஆங்கில புத்தாண்டு என்று நாங்கள் 4 பேரும் திருமலைக்குச் செல்லலாம் என நினைத்தோம். பின்னர் கடலில் குளிக்க நெல்லூர் சென்றோம். அங்கு கடலில் குளித்தபோது, அலை இழுத்துச் சென்றதால் 3 பேரும் இறந்து விட்டனர். தன்னை ஏழுமலையான் காப்பாற்றி விட்டார், என்றார்.

Next Story