திட்டக்குடி அருகே, காதில் வி‌‌ஷம் ஊற்றி இளம்பெண் தற்கொலை


திட்டக்குடி அருகே, காதில் வி‌‌ஷம் ஊற்றி இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 4 Jan 2020 11:15 PM GMT (Updated: 4 Jan 2020 8:01 PM GMT)

திட்டக்குடி அருகே காதில் வி‌‌ஷம் ஊற்றி இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். சிதையில் வைக்கப்பட்ட உடலை போலீசார் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திட்டக்குடி,

திட்டக்குடி அருகே புதுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன், விவசாயி. இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுடைய மகள் இந்துமதி(18). இவர், நேற்று முன்தினம் வீட்டு வேலை செய்யாமல் இருந்துள்ளார். இதைபார்த்த தனலட்சுமி அவரை கண்டித்து திட்டியுள்ளார். இதையடுத்து இளங்கோவனும், தனலட்சுமியும் மளிகை பொருட்கள் வாங்க திட்டக்குடிக்கு சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இந்துமதி இறந்து கிடந்தார். அவர் தனது காதில் வி‌‌ஷத்தை ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இந்த நிலையில் இது குறித்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்காமல், நேற்று காலை இந்துமதியின் உடலை எரிப்பதற்காக அவரது உறவினர்கள் அங்குள்ள சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அவர்கள் செல்வதற்குள் இந்துமதியின் உடலை சுடுகாட்டில் சிதையில் வைத்து எரியூட்டினர். இதில் அவரது உடல் எரிய தொடங்கியது. இந்த நிலையில் அங்கு சென்ற போலீசார், தீயை அணைத்து இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story