விஷம் குடித்து தற்கொலை செய்த, கல்லூரி மாணவி உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் முன்பு உறவினர்கள் மறியல்


விஷம் குடித்து தற்கொலை செய்த, கல்லூரி மாணவி உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் முன்பு உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 7 Jan 2020 10:30 PM GMT (Updated: 7 Jan 2020 11:16 PM GMT)

சின்ன சேலம் அருகே தற்கொலை செய்த கல்லூரி மாணவி உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் முன்பு உறவினர்கள் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் புது காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 48). இவரது மகள் ஐஸ்வர்யா(21), இவர் நமச்சிவாயபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். அப்போது அவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரும் சுமார் ஒரு வருடமாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் அவர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா வி‌‌ஷம் குடித்தார். அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஐஸ்வர்யாவின் தந்தை கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனைக்குப்பின் அவரது உடலை சொந்த ஊரான நைனார் பாளையம் புதுக்காலனிக்கு ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு வந்தனர்.

இதையொட்டி இறுதிச் சடங்குக்காக அவரது வீட்டில் உறவினர்கள் திரண்டு இருந்தனர். இதற்கிடையே ஆம்புலன்ஸ் நைனார்பாளையம் வந்த போது, ஆம்புலன்சை ஐஸ்வர்யாவின் உறவினர்கள் மறித்து மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கீழ்குப்பம் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, அவர்கள், ஐஸ்வர்யாவின் சாவுக்கு காரணமான வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் சுதாகர் உறுதி அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் மறியல் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.

Next Story