திருக்கோவிலூர் அருகே, ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - வாலிபர் கைது


திருக்கோவிலூர் அருகே, ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2020 10:15 PM GMT (Updated: 9 Jan 2020 10:46 PM GMT)

திருக்கோவிலூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் வீரபாண்டி கிராமத்திற்கு சென்று வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்தனர். அதனால் அந்த நபர் ஆத்திரத்தில் மோட்டார் சைக்கிளால் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மீது மோதினார். உடனே சுதாரித்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் திருமால் சாமர்த்தியமாக செயல்பட்டு மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தி அதனை ஓட்டிவந்த வாலிபரை பிடித்தார்.

அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த சாக்கு மூட்டையை போலீசார் பிரித்து பார்த்த போது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட் களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ரியாஸ்(வயது27) என்பதும் வீரபாண்டி கிராமத்தைச்சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவருக்கு குட்கா போதை பொருளை பெங்களூரில் இருந்து வீரபாண்டி அருகே உள்ள புலிக்கல் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை மகன் சேட்டு என்பவர் அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேட்டுவை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story