பிழை இல்லாத வாக்காளர் பட்டியல் அதிகாரிகளுக்கு சிறப்பு பார்வையாளர் அறிவுரை


பிழை இல்லாத வாக்காளர் பட்டியல் அதிகாரிகளுக்கு சிறப்பு பார்வையாளர் அறிவுரை
x
தினத்தந்தி 12 Jan 2020 11:00 PM GMT (Updated: 12 Jan 2020 9:49 PM GMT)

பிழை இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் கருணாகரன் அறிவுரை வழங்கினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வாக்காளர் பதிவு அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளரான கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய பெறப்படும் படிவங்களுடன் உரிய ஆவணங்கள் இணைத்து பெற வேண்டும். பெறப்படும் படிவங்களை இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி கள விசாரணை மேற்கொண்டு உரிய காலத்துக்குள் முடிவு செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் நீக்கம் தொடர்பாக வழங்கப்பட்ட படிவத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பிழை இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் கருணாகரன் அறிவுறுத்தினார்.

சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த 8 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 484 வாக்குச்சாவடிகள் 1,030 மையங்களில் இடம்பெற்றுள்ளன. பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றப்பணிகளுக்கு சிறப்பு முகாம்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவினாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருமுருகன்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமை வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் கருணாகரன் ஆய்வு செய்தார். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை கொடுக்கும்போது அவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு உள்ளதா? என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும் என்று வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதில் ஆர்.டி.ஓ.க்கள் கவிதா(திருப்பூர்), ரவிக்குமார்(உடுமலை), திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாகுல் அமீது, தாசில்தார்கள் முருகதாஸ்(தேர்தல்), மகேஷ்வரன்(திருப்பூர் தெற்கு), ஜெயக்குமார்(திருப்பூர் வடக்கு), சாந்தி (அவினாசி) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story