காங்கேயம் அருகே லாரியில் தேங்காய் பருப்பு கடத்தல்; 3 பேர் கைது


காங்கேயம் அருகே லாரியில் தேங்காய் பருப்பு கடத்தல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jan 2020 10:37 PM GMT (Updated: 13 Jan 2020 10:37 PM GMT)

காங்கேயம் அருகே லாரியில் தேங்காய் பருப்பை கடத்தி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காங்கேயம்,

காங்கேயம் அருகே லாரியில் தேங்காய் பருப்பை கடத்தி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கொப்பனூர்புதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தேங்காய் பருப்பு வியாபாரம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தின் சார்பில் காங்கேயம் அருகே உள்ள காமாட்சிபுரம் என்ற கிராமத்தில் ஒரு தேங்காய் களம் குத்தகைக்கு எடுக்கப்பட்டு உள்ளது. அங்கு தேங்காய் உடைத்து பருப்பு உலர்த்தி சேமித்து வைத்து, பின்னர் தேவையான எண்ணெய் ஆலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக தமிழ்செல்வன் என்பவர் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி காங்கேயம்- திருப்பூர் ரோட்டில் உள்ள ஒரு லாரி அலுவலகத்தில் இருந்து சுப்பிரமணி என்பவரிடமிருந்து தமிழ்செல்வனுக்கு போன் வந்தது. கேரளா செல்கின்ற லாரி இங்கு வந்துள்ளது. கேரளாவிற்கு தேங்காய் பருப்பு லோடு இருக்கிறதா? என லாரிக்காரர்கள் கேட்பதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து கேரளாவிற்கு சரக்கு உள்ளது. அந்த லாரியை வரச்சொல்லுங்கள் என தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

அதன் பின்னர் லாரியுடன் அதன் டிரைவர் உள்பட 3 பேர் அன்று மாலை காமாட்சிபுரத்தில் உள்ள தேங்காய் களத்திற்கு வந்தனர். அப்போது அவர்களிடம் தமிழ்செல்வன் கூறும் போது, கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஜலகுடாவில் உள்ள ஒரு எண்ணெய் ஆலைக்கு சரக்கு உள்ளது.மொத்தம் 320 மூட்டைகளில் 15 ஆயிரத்து 600 கிலோ தேங்காய் பருப்பு இருக்கிறது. லாரியில் ஏற்ற பில் போட்டு தயாராக வைத்து உள்ளேன். எனவே லாரியில் ஏற்றும்போது அதன் பதிவு சான்று, டிரைவரின் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் நகல் களை தருமாறு கேட்டு இருக்கிறார்.

அதற்கு ஆவணங்கள் அனைத்தும் பெருந்துறையில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் இருப்பதாகவும்,அதை எடுத்து வந்து கொடுத்துவிட்டு லாரியை எடுத்து செல்வதாகவும் 3 பேரும் கூறியுள்ளனர். இதையடுத்து லாரியில் தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏற்றப்பட்டன. அதன்பிறகு இரவு 8 மணியளவில் தேங்காய் பருப்பு சம்பந்தப்பட்ட பில்களை அங்கு அலுவலக அறையில் வைத்துவிட்டு தமிழ்செல்வன் கழிவறை சென்றுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் வந்து பார்த்த போது தேங்காய் பருப்புடன் நின்ற லாரியையும் ,அலுவலகத்தில் மேஜையில் வைத்திருந்த தேங்காய் பருப்பு பில்லையும் காணவில்லை.அக்கம் பக்கம் தேடியும் லாரியும் அதில் வந்த 3 பேரையும் காணவில்லை. மறுநாள் கேரளாவில் உள்ள எண்ணெய் ஆலைக்கு தொடர்பு கொண்டு விசாரித்த போது லாரியில் இருந்து சரக்கு இன்னும் வந்து சேரவில்லை என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள். இதையடுத்து தமிழ்செல்வன் காங்கேயம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.லாரியில் கடத்தி செல்லப்பட்ட தேங்காய் பருப்புகளின் மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தேங்காய் பருப்பு சரக்கு ஏற்றி சென்ற லாரி டிரைவரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தது தெரிய வந்தது. அங்கு சென்று விசாரித்த போது, விடுதியில் அறை எடுத்து தங்குவதற்காக கொடுத்து இருந்த முகவரி மற்றும் செல்போன் எண்கள் கிடைத்தது. இதையடுத்து செல்போன் எண்ணை வைத்து கேரள மாநிலம், பாலக்காடு அருகே கொல்லங்கோடு என்ற இடத்தில் லாரி நிற்பது தெரிய வந்தது. அங்கு தனிப்படை போலீசார் சென்று விசாரித்த போது கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் சிக்கினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் லாரி உரிமையாளரான ஈரோடு மாவட்டம் சென்னிமலை சக்திநகரை சேர்ந்த அருணகிரிநாதன் (வயது 62),திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த லாரி டிரைவர் பிரபாகரன் (29) கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஹைட்ரோஸ் (46) ஆகிய 3 பேர் என தெரிய வந்தது. இவர்கள் காங்கேயம் அருகே உள்ள தேங்காய் களத்தில் நூதன முறையில் தேங்காய் பருப்பை லாரியில் ஏற்றி கடத்திக்கொண்டு கொல்லங்கோடு வந்துள்ளனர். பின்னர் தேங்காய் பருப்பை அங்குள்ள ஒரு குடோனில் மறைத்து வைத்து விட்டு, லாரியை அங்குள்ள ஒர்க்‌ஷாப்பில் நிறுத்தி இருந்தனர். சில நாட்கள் கழித்து தேங்காய் பருப்பு மூட்டைகளை எடுத்து விற்க திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் போலீசார் தேடுதலில் சிக்கி கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அவர் களை காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குடோனில் வைத்திருந்த தேங்காய் பருப்பு மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story