திருப்பூரில் பொங்கல் பொருட்கள் வாங்க அலை மோதிய பொதுமக்கள்


திருப்பூரில் பொங்கல் பொருட்கள் வாங்க அலை மோதிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 14 Jan 2020 10:30 PM GMT (Updated: 14 Jan 2020 7:27 PM GMT)

திருப்பூர் மார்க்கெட்டில் பொங்கல் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மல்லிகைப்பூ கிலோ ரூ.2,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர்,

பொங்கல் என்று நம் நினைக்கும் முன்னே தித்திக்கும் செங்கரும்பு, பொன்மேனி நிறத்தை வஞ்சகம் இல்லாமல் வஞ்சிக்கு தரும் மஞ்சள், மண் மணக்கும் மண்பானை, ஜல்லிக்கட்டு, பாரம்பரிய விளையாட்டு என முந்திக்கொண்டு மனதில் இடம்பிடித்து விடுகிறது. ஆம்.. பொங்கல் உதிரத்தோடு கலந்த நன்நாள் அல்லவா... திருநாள் என்றதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழ்நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தொழில் நகரமான திருப்பூரில் பொங்கல் விழா களைகட்டி உள்ளது. அனைத்து பனியன் தயாரிப்பு நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு நேற்று முதல் விடுமுறை அறிவித்துள்ளது. வெளியூர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர்.

இதனால் திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. திருப்பூரில் வசிக்கும் தொழிலாளர்கள், தொழில் நிறுவனத்தினர் மற்றும் பொது மக்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க மார்க்கெட்டில் குவிந்தனர். இதனால் அனைத்து பொருட்களின் விற்பனையும் அமோகமாக இருந்தது. கடைவீதிகளில், அனைத்து ரோடுகளிலும் மக்கள் தலையாய் காட்சி அளித்தது.

நத்தம், தஞ்சாவூர், பவானி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட செங்கரும்புகளை ஆங்காங்கே வைத்து விற்பனை செய்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு வரத்து அதிகமாக இருந்தது. கரும்பு தரம் மற்றும் நீளத்தை பொறுத்து ஒரு ஜோடி ரூ.80 மற்றும் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. அனைத்து கடைகளிலும் கரும்பு விற்பனை அமோகமாக நடைபெற்றது.

பொங்கல்பானை

பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளில் காப்பு கட்டுவது வழக்கம். காப்பு கட்ட தேவையான வேப்பிலை, பூளைப்பூ மற்றும் ஆவாரம் பூ ஆகியவை தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் பகுதிகளில் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது. பொங்கலூர் மற்றும் தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த இவை ஒரு கட்டு ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் பொருட் கள் வாங்க வந்த அனைவரும் இவற்றை வாங்கிச்சென்றதால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்க தேவையான மண்பானைகள் மற்றும் மண் அடுப்புகள் தாராபுரம் ரோட்டில் உள்ள கடைகளில் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. மதுரையில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த பொங்கல் பானை ஒன்று அளவை பொறுத்து ரூ.80 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது. வர்ணம் பூசப்பட்ட பானைகள் சாதாரண பானைகளை விட ரூ.50 அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல மண் அடுப்பு ஒன்று ரூ.140 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொங்கல்பானை விற்பனை நன்றாக இருந்தது.

மஞ்சள் கொத்து

பொங்கல்பானையில் கட்ட பயன்படுத்தும் மஞ்சள் கொத்து பவானி மற்றும் கொடுமுடியில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் எதிரில் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது. இவை ஒரு ஜோடி ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர் பூ மார்க்கெட் அருகில் பல வண்ணங்களில் கோலப்பொடி விற்பனை செய்யப்பட்டது. குறைந்த பட்ச விலையாக ஒரு பாக்கெட் ரூ.10-க்கு கோலப்பொடி விற்பனை செய்யப்பட்டதால் பெண்கள் தாங்கள் விரும்பிய வண்ணங்களில் கோலப்பொடிகளை வாங்கிச்சென்றனர்.

பழவகைகள்

திருப்பூர் மார்க்கெட்டில் வழக்கமாக ரூ.15-க்கு விற்கப்படும் தேங்காய் ஒன்று நேற்று ரூ.17-க்கும், ரூ.20-க்கு விற்கப்பட்ட தேங்காய் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல ரூ.4-க்கு விற்கப்பட்ட பூவன் வாழைப்பழம் ஒன்று ரூ.6-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகமாக இருந்தாலும் தேங்காய், பழம் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

பூ மார்க்கெட்டின் எதிர்புறம் தள்ளு வண்டிகளில் பழவகைகள் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.140-க்கும், ஆரஞ்சு ரூ.80-க் கும், திராட்சை ரூ.120-க்கும், மாதுளை ரூ.140-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து பழங்களின் விலையும் கிலோவுக்கு ரூ.20 உயர்ந்திருந்தது.

பூக்களின் விலை உயர்வு

திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு அவினாசி, சத்தியமங்கலம், திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து அனைத்து விதப்பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக 5 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக 7 முதல் 10 டன் வரை பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் நேற்று 20 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அதே சமயம் அனைத்து பூக்களின் விலையும் மிகவும் உயர்ந்திருந்தது.

அந்த வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.2 ஆயிரத்து 400-க்கும், ரூ.1,600-க்கு விற்கப்பட்ட முல்லை ரூ.2 ஆயிரத்துக்கும், ரூ.800-க்கு விற்கப்பட்ட ஜாதி மல்லி ரூ.1,000-க்கும், ரூ.800-க்கு விற்கப்பட்ட காக்கடா ரூ.1,000-க் கும், ரூ.160-க்கு விற்கப்பட்ட அரளி ரூ.180-க்கும், ரூ.160-க்கு விற்கப்பட்ட செவ்வந்தி ரூ.200-க்கும், ரூ.80-க்கு விற்கப்பட்ட பட்டுப்பூ ரூ.100-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்களை வாங்கிச்செல்ல திருப்பூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் அதிக அளவில் வந்திருந்ததால் பூ மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலை மோதியது. பூக்களின் விற்பனையும் அமோகமாக இருந்தது.

பூக்களை வாங்க வந்தவர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தை பூ மார்க்கெட் எதிரில் உள்ள பெருமாள் கோவில் சுற்றுச்சுவர் அருகே நிறுத்தி விட்டு சென்றனர். ஆனால் அந்த இடத்தில் பூளைப்பூ, ஆவாரம் பூ, வேப்பிலை விற்பனை செய்பவர்கள் மற்றும் பழவண்டிகள் நிறுத்தப்பட்டிருந்ததால் பூ மார்க்கெட் அருகே கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.

மொத்தத்தில் இந்த ஆண்டு பொங்கல் விற்பனை அமோகமாக இருந்தது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story