இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்கவேண்டும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்


இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்கவேண்டும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 Jan 2020 10:45 PM GMT (Updated: 14 Jan 2020 7:43 PM GMT)

இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடத்தூர், 

கோபி அருகேயுள்ள குள்ளம்பாளையத்தில் அம்மா விளையாட்டு திட்டத்தின் கீழ் புதிய விளையாட்டு மைதானம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா விழாவுக்கு தலைமை தாங்கினார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விழாவில் கலந்துகொண்டு கைப்பந்து விளையாடி புதிய மைதானத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

ஆர்.டி.ஓ. ஜெயராமன், மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார், தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அதிகாரி குணசேகரன் மற்றும் ஊராட்சி தலைவர்கள் விழாவில் கலந்துகொண்டார்கள்.

முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் 7 மாதத்தில் நேரு ஸ்டேடியத்தை கட்டி முடித்து சாதனை படைத்தார். அவரது வழியில் இந்த அரசு விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளிலும், 528 பேரூராட்சிகளிலும் இத்திட்டம் இன்று எல்லா மாவட்டங்களிலும் தொடங்கப்பட உள்ளது. இது இந்த அரசின் தொலைநோக்கு சிந்தனையை காட்டுகிறது.

இந்த ஆட்சியில் கோப்புகள் தேங்குவதில்லை. உடனடியாக பணிகள் நடைபெறுகின்றன. 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சாதிச்சான்று சமர்ப்பிக்க வேண்டும் என எந்த உத்தரவும் அரசு பிறப்பிக்கவில்லை. மாணவர்கள் பயன்படுத்திய புத்தகங்களை திரும்ப பெற்று அதனை பாதுகாப்பாக வைத்து மீண்டும் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசித்து வருகிறோம். ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள சேவை மையங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும். ஈரோடு-கோபி வரை 4 வழிச்சாலை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story