நீடாமங்கலம் அருகே பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்த 3 பேர் கைது


நீடாமங்கலம் அருகே பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jan 2020 11:00 PM GMT (Updated: 14 Jan 2020 8:28 PM GMT)

நீடாமங்கலம் அருகே பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 3 பேரை போலீசர் கைது செய்தனர்.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே உள்ள அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால். இவருடைய மனைவி கலைவாணி (வயது 35). இவர் கடந்த 6-ந் தேதி மாலை தனது ஸ்கூட்டியில் நீடாமங்கலம் வந்தார். இங்கு கடைகளில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பினார். அப்போது இரவு 7 மணியளவில் கொண்டியாறு பாலம் பகுதியில் கலைவாணி சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஸ்கூட்டியின் பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கலைவாணியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து கலைவாணி நீடாமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரத்தை சேர்ந்த ராம்கி (27), மயிலாடுதுறை செட்டிக்குளம் தென்புறம் பகுதியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (23), மயிலாடுதுறை மாப்படுகையை சேர்ந்த பிரவீன் (29) ஆகிய 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் 3 பேரும் கலை வாணியிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். இதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து நீடாமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவுப்படி ராம்கி, விக்னேஷ், பிரவீன் ஆகிய 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story