திருவாரூர் அருகே கிராம மக்கள் ஒன்றிணைந்து பொங்கலிட்டனர்


திருவாரூர் அருகே கிராம மக்கள் ஒன்றிணைந்து பொங்கலிட்டனர்
x
தினத்தந்தி 16 Jan 2020 11:00 PM GMT (Updated: 16 Jan 2020 7:42 PM GMT)

திருவாரூர் அருகே கிராம மக்கள் ஒன்றிணைந்து பொங்கலிட்டனர்.

திருவாரூர்,

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை அனைவரும் உற்சாகமாக கொண்டாடினர். உழவர்கள் விளைவித்த நெல்மணிகளை அறுவடை செய்து வீட்டிற்கு கொண்டு வந்து, அதை அரிசியாக்கி, புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு வழிபாடு நடத்துவது வழக்கம். இதன் மூலமாக விவசாயம் வளம் பெருகும், விவசாயிகளின் வாழ்வாதாரம் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

இந்தநிலையில் திருவாரூர் அருகே உள்ள சேந்தனங்குடி கிராம மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். அதன்படி படைவெட்டி மாரியம்மன் கோவிலில் முன்பு கிராம மக்கள் ஒன்றிணைந்து புதுபானையில் பச்சரிசி், வெல்லம் ஆகியவற்றை இட்டு பொங்கல் வைத்தனர்.

சிறப்பு அலங்காரம்

விழாவையொட்டி அப்பகுதியில் மாலை தோரணங்கள், செங்கரும்பு கொண்டு அலங்கரித்து பாரம்பரிய உடையுடன் பொங்கலி்ட்டனர். அப்போது அம்மனுக்கு அபிஷேகத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜை

திருவாரூர் சாய்பாபா கோவிலில் உள்ள பசு மடத்தில் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது மாடுகளுக்கு மாலை அணிவித்து அலங்கரித்து வழிபட்டு அறுசுவை உணவு படைத்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. தொடர்ந்து பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள பசு மடத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருமக்கோட்டை

அதேபோல திருமக்கோட்டை பொன்னியம்மன் கோவில் திடலில் மாட்டு பொங்கல் விழா நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள மக்கள் மாடுகள் அனைத்தும் ஒரே இடத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் மாட்டிற்கு வர்ணம் தீட்டி பொங்கல் இட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதில் திரளான பேர் கலந்து கொண்டனர்.

Next Story